புட்போர்டு பயணத்தை தடுக்க பேருந்து படிக்கட்டை அரசு நீக்கியதா? குஷ்பு சொல்வது உண்மையா? நடந்தது என்ன?
சென்னை: சேலம் அருகே தானாக உடைந்து விழுந்த பேருந்து படிக்கட்டை, புட் போர்டு பயணத்தை தடுக்க அரசே படிக்கட்டை எடுத்ததாக பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை குன்றத்தூர் டூ போரூர் இடையே மாநகர பேருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது. அதில் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடியும் பேருந்தில் மேற்கூரையில் ஏறியபடியும் மாணவர்கள் பயணம் செய்தனர்.

அந்த பேருந்தில் பின்னால் தனது காரில் அதே வழித்தடத்தில் பயணம் செய்து கொண்டதை பார்த்த நடிகை ரஞ்சனா நாச்சியார், அந்த பேருந்தை வழிமறித்து மாணவர்களை எல்லாம் கடுமையாக திட்டியும் அடித்தும் வெளியே இறக்கிவிட்டார்.
இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலானது. அதில் மாணவர்களை நாயே என அழைத்து அறிவில்லையா என கேட்டு கடுமையாக தாக்குதல் நடத்தினார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். சிலர் பாராட்டுகளையும் தெரிவித்தனர். பேருந்துக்குள் இடம் இருந்தாலும் வேண்டுமென்றே படிக்கட்டுகளில் தொங்குவது மேற்கூரையில் பயணிப்பது, போன்ற செயல்களை செய்து மாணவர்கள் ஹீரோயிஸம் செய்ய முயற்சிக்கிறார்கள்.
இதனால் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அவர்கள் கீழே விழுந்தால் உயிரிழப்போ, உறுப்பு இழப்போ, கடுமையான படுகாயங்களோ ஏற்படும் அபாயம் இருக்கிறது. அது போன்ற அலட்சியத்தால் நிறைய இளைஞர்களும் மாணவர்களும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் பாரம் தாங்காமல் பேருந்தும் நிலைத்தடுமாறும் சூழலும் ஏற்படுகிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மாணவர்கள் படியில் பயணம் செய்ய வேண்டாம் என அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் சிலர் அதை கேட்பதில்லை, இளம் கன்று பயமறியாது இல்லையா? இந்த நிலையில் மாணவர்களை தாக்கிய வழக்கில் புகாரின் பேரில் நடிகை ரஞ்சனா நாச்சியார் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். அவருக்கு அன்றைய தினமே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து வீட்டுக்கு வந்த அவர் எதற்காக மாணவர்களை அடித்தார் என்பதற்கான விளக்கத்தை கொடுத்தார். மேலும் பெண்களுக்கென தனி பேருந்துகள் இருப்பது போல் மாணவர்களுக்கும் தனித்தனியே தானியங்கி கதவுகளுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தார்.
இந்த நிலையில் ரஞ்சனா நாச்சியப்பனுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். பூந்தமல்லியில் துணிக்கடையின் 57 ஆவது கிளையை நடிகை குஷ்பு திறந்து வைத்தார். அப்போது அவரிடம் திமுக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நான் சுபகாரியத்திற்கு வந்துள்ளேன். இது அரசியல் பேசும் இடமல்ல! எனவே அரசியல் கேள்விகளை தவிர்த்துவிடுங்கள் என்றார்.
இதையடுத்து ரஞ்சனா நாச்சியப்பன் குறித்து கேட்ட போது நீங்கள் நேரடியாக மூக்கை தொடுவதும் ஒன்றுதான் தலையை சுற்றி மூக்கை தொடுவதும் ஒன்றும், மீண்டும் அரசியல் கேள்வியா என கேட்டபடியே குஷ்பு கூறுகையில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் 2 இன்ச் பேருந்தின் சக்கரத்திற்கு தள்ளி விழுந்ததால் அந்த மாணவர் உயிர் தப்பிய வீடியோவை பார்த்தேன்.
இதை யாருமே தட்டி கேட்கவில்லை. அந்த மாணவரின் பெற்றோரிடம் கூட படிக்கட்டில் பயணம் செய்வது தவறு என மாணவருக்கு அறிவுறுத்தவில்லையே என்றும் யாரும் கேட்கவில்லை. ஆனால் படிக்கட்டில் பயணம் செய்தவர்களை தட்டிக் கேட்டதற்கு நடிகை ரஞ்சனாவை கைது செய்கிறார்கள். பிறகு இன்று காலை ஒரு வீடியோ பார்த்தேன். அதில் ஒரு படிக்கட்டையே எடுத்துவிட்டார்கள். படிக்கட்டில் பயணம் செய்வோரை தடுக்க ஒவ்வொரு பேருந்தில் இருந்தும் கடைசி படிக்கட்டை எடுத்துவிட்டால் போதுமா என குஷ்பு கேள்வி எழுப்பியிருந்தார்.
சேலம் அயோத்தியபட்டினம் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக அம்மாபேட்டை சீலநாயக்கன்பட்டி ஜங்ஷன் சென்று சேலம் நகர பேருந்து வழியாக 13B என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இந்த பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது பயணி ஒருவர் கீழே இறங்கினார். அப்போது பேருந்து படிக்கட்டுகளில் உள்ள கடைசி படி முழுசாக உடைந்து கீழே விழுந்தது. ஆனால் குஷ்புவோ படிக்கட்டை அரசே எடுத்துவிட்டதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications