சிறுவன் கடத்தல் விவகாரம்! பூவை ஜெகன்மூர்த்தி மீண்டும் தலைமறைவு?
சென்னை: காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த கே.வி.குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியின் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது மகளை மீட்க விஜயஸ்ரீயின் தந்தை, பூவை ஜெகன்மூர்த்தியை அணுகியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தனுஷின் வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற அந்த பெண்ணின் தந்தை, தனது மகளை அனுப்புமாறு கேட்டார். அங்கு அவரது மகள் இல்லை. இதனால் தனுஷின் 17 வயது தம்பியை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தனுஷின் தாய் லட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் தேடி வந்ததால் அந்த சிறுவனை கடத்தியவர்களே, வீட்டு வாசலில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். இந்த கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமின் கார் பயன்படுத்தப்பட்டதை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக பூவை ஜெகன்மூர்த்தியை தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்து கொண்டு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெகன்மூர்த்தி நேரில் வந்து தாக்கல் செய்தால் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர்.
இதையடுத்து ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜரானார். இந்த வழக்கை நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்த நிலையில், இந்த கடத்தலுக்கு பூவை ஜெகன்மூர்த்திதான் மூளையாக செயல்பட்டார் என காவல் துறை வாதம் செய்தது. மேலும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்திருந்தது.
அப்போது நீதிபதி, எம்எல்ஏவை மக்கள் தேர்வு செய்வது இப்படி கடத்தல் செய்வதற்காகத்தானா என நீதிபதி வினவினார். இதையடுத்து இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனால் தான் கைது செய்யப்படுவோம் என எண்ணிய பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications