கேப்டன் விஜயகாந்தின் உயிர் பிரிந்த நேரம் எப்போது தெரியுமா?.. மைத்துனர் சுதீஷ் அறிவிப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் இன்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார் என அவருடைய மைத்துனர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி காய்ச்சல், சளி காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பூரண நலம் பெற்றார் என அறிவித்த மியாட் மருத்துவமனை அவரை வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்தது.

இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி திருவேற்காட்டில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவர் வீல் சேரில் வந்ததை பார்த்ததுமே ரசிகர்கள் மனம் நொறுங்கிவிட்டது.
வாட்டசாட்டமாக கம்பீரமாக காட்சியளித்த விஜயகாந்த் தேகம் பாதியான நிலையில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தது காண்போர் நெஞ்சை கலங்க செய்தது. இந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என கட்சி சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து அவரது சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து விஜயகாந்த் உடல்நிலையில் சற்று பின்னடைவு என தகவல் கிடைத்தது. இதையடுத்து கட்சியினர் ரசிகர்கள் என விஜயகாந்த் வீடு முன்பும் கட்சி அலுவலகம் முன்பும் கூடினர்.
இந்த நிலையில் விஜயகாந்த் நுரையீரல் அழற்சியால் காலமானார் என மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொண்டர்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கிவிட்டனர். விஜயகாந்தின் உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது விஜயகாந்துடன் பிரேமலதா அமர்ந்திருந்தார். அவருடைய கன்னத்தை தொட்டு தொட்டு பார்த்தபடியே அழுதுக் கொண்டிருந்தார். இதையடுத்து விஜயகாந்த் உடல் சாலிகிராமம் வீட்டை அடைந்தவுடன் அவரது உடலுக்கு முதல் ஆளாக முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முதல்வரை பார்த்ததும் பிரேமலதா கதறி அழுதார். பிறகு அவருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல் எப்போது நல்லடக்கம் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து விஜயகாந்தின் மைத்துநர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு விஜயகாந்த் காலமானார். அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது என சுதீஷ் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் இறந்த தகவல் 8.45 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்தின் உடலுக்கு நாளை மாலை வரை தொண்டர்கள், கட்சியினர், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications