லக்கிம்பூர் கொலை.. வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்.. ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து
சென்னை: இன்று பல்வேறு வடமாநிலங்களில் விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாய போராட்டத்தின் போது விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையில் நடந்த மோதலில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொன்ற புகாரில் இவர் கைதாகி உள்ளார். இவருக்கு பெயில் மறுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

கைது
இதில் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டாலும் இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அஜய் மிஸ்ரா பதவியில் இருந்தால் விசாரணை சரியாக நடக்காது. இதில் பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். உத்தர பிரதேச போலீசை நம்ப முடியாது என்று விவசாயிகள் அமைப்பு கூறியுள்ளது.

கோரிக்கை
இந்த நிலையில்தான் லக்கிம்பூர் கொடூரத்திற்கு நீதி வேண்டியும், அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பெரிய அளவில் ரயில் போக்குவரத்து இன்று பாதிக்கப்பட்டது.

போராட்டம்
காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு இந்த போராட்டம் நிறைவு பெறும். தேசிய அளவில் செல்லக்கூடிய ரயில்களை மறித்து இவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு மூலம் விவசாய சங்கங்கள் எல்லாம் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன.

ரயில் மறியல்
இதனால் நாடு முழுக்க 40 இடங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல வழி தடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், உத்தர பிரதேசம், பீகார், டெல்லி, உத்தரகான்ட், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாவட்டங்களில் இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10-15 முக்கியமான ரயில்கள் எங்கும் நகர முடியாமல் முடங்கி இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

போலீஸ்
ரயில் தண்டவாளங்களில் அமர்ந்தபடி விவசாயிகள் இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். உத்தர பிரதேச மாநிலத்தில்தான் அதிக அளவில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு பெரிய அளவில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு சட்டம்
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தர பிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது. நாங்கள் மக்களுக்கு இடையூறு விளைவிக்க விரும்பவில்லை. ஆனால் எங்கள் போராட்டத்தின் கோரிக்கையை ஏற்க வேண்டும். விவசாய சட்டங்களை நீக்க வேண்டும். அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக. அது வரை நாங்கள் வெவ்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்துவோம் என்று சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications