டிரெஸ்ஸை கழட்டு..இல்ல கொன்றுவோம்! மணிப்பூர் பெண்களை ஊர்வலமாக இழுத்து பலாத்காரம் -டிரெண்டில் முதலிடம்
இம்பால்: மணிப்பூரில் 2 குகி இன பழங்குடி பெண்களை மைதேயி சமூக இளைஞர்கள் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கும்பலாக பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, "மணிப்பூரில் பழங்குடி இன குழுவை சேர்ந்த பெண் ஒருவரை 200க்கு மேற்பட்ட ஆண்கள் சேர்ந்து பொது வெளியில் நிர்வாணமாக அழைத்து வந்து பாலியல் சீண்டல் செய்யும் நிகழ்வு நடக்கிறது. இதனை வேடிக்கை பார்த்து மோடி கட்சியின் முதலமைச்சர் உட்காற்ந்து கொண்டு இருக்கிறான்! ஏன் இப்படி மனித மிருகங்களாக ஆகிவிட்டனர் இவர்கள்! மணிப்பூர் கலவரத்தினை வேடிக்கை பார்க்கும் மோடியின் மன நிலை என்னவாக இருக்கும்!" என்று குறிப்பிட்டு உள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மணிப்பூரில் என்ன நடந்தாலும் அதன் மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் அது மிகவும் கொடூரமானது. பாரத் மாதா கீ ஜெய் சொன்னால் மட்டும் போதாது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி ஜி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. இது ஒவ்வொரு இந்திய குடிமகனையும் வேதனைப்படுத்துகிறது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ள பதிவில், "குஜராத்தி பெண்ணுக்கு நீதி மறுக்கப்பட்ட போதே, இந்நாட்டின் மனசாட்சி விழித்திருந்தால் மணிப்பூர் பெண்களுக்கு இது நேர்ந்திருக்குமா? நாளை நம் வீட்டுப் பெண்ணுக்கும் இது நிகழும் முன் விழித்திடு INDIA.." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "மணிப்பூரில் இரண்டு பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வருவதை காணும்பொழுது மனது ரணமாகிறது. இதெல்லாம் நியாயம் தான் என அந்த மனித மிருகங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருப்பது தான் அதிர்ச்சி கலந்த வேதனை. பிரதமர் மோடி அவர்கள் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்து உள்ளார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுதான் பாஜக கட்டமைக்க விரும்பும் தேசம் எனில், இந்த தேசம் மண்ணோடு மண்ணாக போகட்டும், வீசும் காற்றில் விஷம் பரவட்டும். கொடுமை" என்று காட்டமாக பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications