விஜய் அப்படி சொன்னாரே.. ஆனால் பத்திரப் பதிவு புயல் வேகத்தில் நடக்குது! நிலம் வழங்கிய பரந்தூர் மக்கள்
சென்னை: பரந்தூருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று போராடும் விவசாயிகளை சந்திக்க வேண்டும், இல்லையென்றால் நானே விவசாயிகளை அழைத்துக்கொண்டு தலைமைச் செயலகம் வருவேன் என தவெக தலைவர் விஜய் அண்மையில் பேசிய நிலையில், பரந்தூரில் பத்திரப் பதிவு தொடங்கி உள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்வது ஒருபுறம் இருக்கும் நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பத்திரப்பதிவும் தொடங்கியுள்ளது.

பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம்
சென்னைக்கு 2வது விமான நிலையம், அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன. இறுதியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில், விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு திட்ட செலவு 29,150 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் டிட்கோ (தொழில் வளர்ச்சி நிறுவனம்) நிறுவனம் மூலமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
விவசாயிகள் எதிர்ப்பு
பரந்தூர் விமான நிலையம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. சுமார் 3,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீடு தொகை நிர்ணயம் செய்து தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. அதில் ஒரு ஏக்கருக்கு 35 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 2.57 கோடி ரூபாய் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை திருப்தி படுத்தும் வகையில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்திரப் பதிவு தீவிரம்
இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு, பத்திரப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடைபெற்றது. 17.52 ஏக்கர் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 9.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க அரசுக்கு நிலத்தை தர சம்மதம் தெரிவித்து 5 கிராமங்களை சேர்ந்த 19 நில உரிமையாளர்கள் நிலம் வழங்கியுள்ளனர். நிலம் பதிவு செய்யப்பட்ட 4 மணி நேரத்தில், வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் விடுத்த எச்சரிக்கை
அண்மையில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில், பரந்தூர் விமான நிலைய விவகாரம் பற்றிப் பேசிய விஜய், "பரந்தூரில் விமான நிலையம் மக்கள் பாதிக்காத வகையில் அமைப்போம் எனச் சொல்றீங்க.. அப்படின்னா என்னங்க சார்? ஒண்ணு.. அந்த இடத்தில் ஏர்போர்ட் வருதுன்னு சொல்லணும்.. இல்லை அந்த இடத்தில் ஏர்போர்ட் வராதுன்னு சொல்லணும். வெறும் 1,005 குடும்பங்கள் என்றால் அவ்வளவு சாதாரணமா போச்சா சி.எம் சார்? நீங்க உங்களை மக்களின் முதல்வர்னு நா கூசாமல் சொல்றீங்க.. எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார் விஜய்.
மேலும், பரந்தூர் மக்களை தயவு செய்து நீங்க நேரில் சந்தித்து பேசுங்க.. அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்கிற உத்தரவாதத்தை நீங்க கொடுக்கனும். இல்லைனா பரந்தூர் விவசாயிகளை நானே தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்து முறையிடுவேன் என நேரடியாக முதல்வர் ஸ்டாலினுக்கு டிமாண்ட் வைத்திருந்தார் விஜய்.
இந்நிலையில் தான் பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான பத்திரப்பதிவு தொடங்கி உள்ளது. தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், பரந்தூரில் பத்திரப் பதிவு தீவிரமடைந்ததைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications