மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம்.. டிசம்பர் 19ல் தொடங்கி வைக்கும் ஸ்டாலின்!
சென்னை: சென்னையில் டிசம்பர் 19ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த இலவச லேப்டாப் திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேருக்கு பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கொடுத்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு நிதி பிரச்சனை காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின், தற்போது விலையில்லா லேப்டாப் வழங்க முடிவு எடுக்கப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

கடந்த பட்ஜெட் தாக்கலின் போது, நடப்பாண்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என்றும், இதற்காக தமிழக அரசு தரப்பில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் தேவைப்பட்டால் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும் என்று கூறிய தங்கம் தென்னரசு, ஒரு லேப்டாப்பின் மதிப்பு ரூ.20 ஆயிரமாக இருக்கும் என்றும் கூறினார்.
இதையடுத்து 20 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்தவற்கான டெண்டர் பணிகளை தமிழக அரசு தொடங்கியது. இந்த டெண்டரில் சர்வதேச நிறுவனங்களான டெல், ஏசர் மற்றும் ஹெச்பி ஆகிய 3 நிறுவனங்களும் விண்ணப்பித்திருக்கின்றன. இதையடுத்து டெண்டர் இறுதி செய்யப்பட்டு, இந்த 3 நிறுவனங்களுக்கும் லேப்டாப் வழங்க ஆணையிடப்பட்டது.
இருந்தாலும் கல்லூரி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கல்லூரி மாணவர்களுக்கான விலையில்லா கணினி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிப்ரவரி மாதம் இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 12ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்பட உள்ள நிலையில், அடுத்த வாரத்தில் இலவச லேப்டாப்களும் வழங்கப்பட உள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications