தொற்றிய பதற்றம்! உற்று பார்த்த வீர முத்துவேல்! நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய கடைசி நிமிட காட்சிகள்
சென்னை: இந்தியாவின் இஸ்ரோ மூலம் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் களமிறங்கி உள்ளது. இந்த விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கிய தருணத்தின் புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் இருந்து எந்த மெசேஜும் செல்லாமல் சுயமாக விக்ரம் லேண்டர் இறங்கியது.

இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. நேற்று மாலை 5.45 மணிக்கு விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. லேண்டர் மாடுல் நிலவை நோக்கி இறக்கப்பட்டது. ரஃப் பிரேக்கிங் மற்றும் ஆல்டிடியூட் ஹோல்ட் கட்டம் மூலம் இந்த விக்ரம் களமிறக்கப்பட்டது. அதாவது திரஸ்டர்கள் (4ல் இரண்டு இயங்கும்) பிரேக் போல செயல்பட்டு இதை இறக்கியது. இதன் மூலம் 30 கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டு இருந்து லேண்டர் கொஞ்சம் கொஞ்சமாக தரையிறக்கப்பட்டது. 11.5 நிமிடத்தில் விக்ரம் லேண்டர் 7.4 கிமீ உயரம் வரை கொண்டு வரப்பட்டது. 1.68km கிமீ / நொடி என்ற வேகத்தில் இந்த லேண்டர் இறங்கியது. அதன்பின் ஆல்டிடியூட் ஹோல்ட் கட்டம் மூலம் இதன் உயரம் 6.5 கிமீ உயரம் வரை குறைக்கப்பட்டது.
அதன்பின் இதன் உயரம் மேலும் ஏஎல்எஸ் எனப்படும் ஆட்டோமேட்டிக் லேண்டிங் சிஸ்டம் மூலம் திரஸ்டர்கள் உதவியுடன் குறைக்கப்பட்டது. இந்த கட்டத்தில் விக்ரம் லேண்டர் ஆட்டோமேட்டிக் முறையில் இறங்கியது. இதில் இஸ்ரோ எந்த கமெண்டும் கொடுக்கவில்லை. 3 நிமிடங்கள் இது தொடர்ந்தது. 800 மீட்டர் உயரத்தை அடையும் அடையும் வரை கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் திரஸ்டர்கள் உதவியுடன் இதன் உயரம், வேகம் குறைக்கப்பட்டு ஏஎல்எஸ் மூலம் லேண்டர் மேலும் கீழே இறக்கப்பட்டது.
கடைசியாக 10 மீட்டர் உயரம் இருக்கும் வரை விக்ரம் உயரம் குறைக்கப்பட்டு வந்தது. இந்த பணிகளுக்கு இடையிலேயே கேமரா உதவியுடன் நிலவில் எங்கே இறங்க வேண்டும் என்று லேண்டர் கண்டுபிடித்தது. இந்த காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன
இடத்தை தேடிய லேண்டர்: முதலில் கண்டுபிடிக்கப்பட்ட லோகேஷன் சரியில்லை என்பதால் இரண்டாவதாக மீண்டும் லோகேஷனை தேடியது. அப்போதே விக்ரம் லேண்டர் வெற்றிபெறும் என்பது உறுதியாகிவிட்டது. ஏனென்றால் ஆபத்தான இடத்தை தவிர்த்துவிட்டு விக்ரம் லேண்டர் அங்கேயே மிதந்து வேறு இடம் நோக்கி சென்றதால் இது கண்டிப்பாக வெற்றிபெறும் என்று உறுதி ஆனது. இரண்டாவதாக கண்டுபிடித்த இடத்தில் விக்ரம் லேண்டர் இறங்கியது. 10 மீட்டர் உயரம் வரை கொண்டு செல்லப்பட்ட லேண்டர் அங்கிருந்து ப்ரீ பாலிங் மூலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த நேரத்தில் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் ஆகியோரின் முகம் பதற்றத்தோடு காணப்பட்டது.
கடைசி நிமிடம்: சந்திரயான் 2 லேண்டரில் 5 திரஸ்டர்கள் இருந்தன. ஒன்று செயல்படாமல் போனால் பாதுகாப்பிற்கு 5வதாக ஒரு திரஸ்டர் சந்திரயான் 2 லேண்டரில் இருந்தது. ஆனால் கூடுதல் திரஸ்டர்கள் இருப்பது கூடுதல் எடையை ஏற்படுத்தி விபத்திற்கு காரணமாக இருப்பதால் சந்திரயான் 3ல் உள்ள லேண்டரில் 4 திரஸ்டர்கள் மட்டுமே உள்ளன.
முன்பு சந்திராயன் 2ல் எல்லா திரஸ்டர்களும் ஒரே நேரத்தில் கீழே இறங்கும் போது இயங்கும். ஆனால் சந்திரயான் 3ல் முதலில் 2 திரஸ்டர்கள் செயல்படும். அவை செயல் இழக்கும் பட்சத்தில் மற்ற 2 திரஸ்டர்கள் இயங்கும். அப்படித்தான் இன்று திரஸ்டர்கள் திட்டமிடப்பட்டபடி இயங்கியது இதனால் விக்ரம் லேண்டரும் சரியாக இறங்க முடிந்தது.












Click it and Unblock the Notifications