200 தொகுதிகளில் முன்னிலை! 2009க்கு மீண்டும் திரும்பும் காங்கிரஸ்! தொண்டர்கள் உற்சாகம்!
சென்னை: 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு தேர்தல்களைவிடக் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. அதற்கான அறிகுறிகள் வாக்கு எண்ணிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 18 ஆவது மக்களவைத் தேர்தல் மொத்தம் 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன.
இதனையடுத்து அனைத்து தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி மீண்டும் உபியில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
காங் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் உபியில் உள்ள ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இருவரும் அவரவர் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10:15 மணி நிலவரப்படி 209 இடங்களில் முன்னிலையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதே போல் பாஜக மொத்தம் 300 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் மிகப் பலவீனமாக இருந்தது. குறிப்பாக 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பாஜகவைச் சமாளிக்க முடியாத அளவுக்குப் பின் தங்கி இருந்தது. ஆனால், இந்த 2024 தேர்தலில் காங்கிரஸ் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது.
2014 தேர்தலில் 44 தொகுதிகளிலும் 2019இல் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது காங்கிரஸ் கட்சி. இந்த 2024 தேர்தலில் கிட்டத்தட்ட 100 இடங்களில் வெல்வதற்கான வாய்ப்பை ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கையின் போதே பெற்றுள்ளது. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் காங்கிரஸ் கிட்டத்தட்ட 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த வளர்ச்சி காங்கிரசைப் பொறுத்தவரை நல்ல வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. அதாவது 2009 இல் காங்கிரசுக்கு இருந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுள்ளது. 2009இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சுமார் 206 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது.

இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்டமைத்த 'இந்தியா' கூட்டணி என்ற பிம்பம் தான். இன்னும் அழுத்தமாகப் பார்த்தால் சரியான தலைமை இல்லாமல் தள்ளாடி வந்த காங்கிரஸ், இந்த முறை மோடியைச் சமாளிக்கக் கூடிய அளவுக்குத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
மேலும் தேர்தல் தொடங்குவதற்கு முன்பாகவே ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பயணத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் வலம் வந்தார்.
அதே வேகத்தில் தேர்தலை ஒட்டி பல மாநிலங்களில் பேரணியில் ஈடுபட்டார். இவரைப் போலவே இவரது சகோதரி பிரியங்கா காந்தி பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
உடனுக்குடன் பாஜக மற்றும் மோடியின் பிரச்சாரத்திற்கு இந்த இருவரும் பதிலடி கொடுத்தனர். சொல்லப்போனால், இந்தத் தேர்தலில் பாஜகவின் பேசு பொருளாகக் காங்கிரஸ்தான் இருந்தது.
தெரிந்தோ தெரியாமலோ மோடி பல இடங்களில் காங்கிரஸை டார்கெட் செய்து அக்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
ஒரு காலத்தில் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று பேசிய மோடி, இந்த முறை மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்று ஏகாரம் போட்டுப் பேசும் அளவுக்குக் காங்கிரஸ் வளர்ச்சியைப் பெற்றிருந்தது.
ஆகவே, 2014க்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு லேசான நம்பிக்கையுடன் கூடிய பொற்காலம் தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications