“இந்தியாவை காப்பாற்றும் வழிகாட்டி..” சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்திய பெண் ஆளுமைகளில் சோனியா காந்தி முக்கியமானவர். இந்நிலையில் இன்று அவருக்கு 77வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இது குறித்து x சோஷியல் மீடியா தளத்தில், "சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின், "அர்ப்பணிப்புள்ள பொது வாழ்க்கையின் உதாரணமாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் முயற்சியில், அவரது அனுபவம் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, "காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக தைரியம், துணிச்சல் மற்றும் தன்னலமற்ற தியாகத்துடன் போராடிய அவர் கருணையின் அடையாளமாக இருந்துள்ளார். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சயின் பொதுச்செயலார் கே.சி.வேணுகோபால், "சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பொதுசேவைக்கான அர்ப்பணிப்பு, விளிம்பு நிலை மக்களுக்கான போராட்டம் கோடிக்கணக்கான இதயங்களை வென்றிருக்கிறது. சவாலான காலக்கட்டத்தில் காங்கிரஸை மிகுந்த உறுதியுடன் வழிநடத்தினார். நாட்டின் அதிவேக வளர்ச்சிக்கு காரணமாக யுபிஏ அரசாங்கத்தின் சிற்பியாக இருந்திருக்கிறார். அவரது வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications