எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது அதிமுகவில் பிரச்சனையை கிளப்பியது. அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமை செயலகத்தில் வைத்தே தவெகவில் இணைந்தனர். அதிமுகவில் மேலும் பல மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு அதிமுகவில் சமீபத்தில் இணைந்த லாட்டரி அதிபர் மனைவி லீமாரோஸ் காரணம் என புகார்கள் எழுந்தன. தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - வேலுமணி அணிகள் இணைந்துள்ளன. தன்னை விமர்சித்தவர்களை வாடகை பேச்சாளர்கள் என்று லீமாரோஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
லால்குடி எம்எல்ஏவும், அதிமுக மாநில மகளிரணி இணைச் செயலாளருமான லீமா ரோஸ் மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம். அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கழகம் ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமீப காலமாக என்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் பொய்த்துப் போயின.

வாடகை பேச்சாளர்கள்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, இதய தெய்வம் அம்மா அவர்களால் செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த இணைப்பு.
பல கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது என் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். எனது தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே என்னுடைய முதன்மை கடமையாக எண்ணுகிறேன்.
லீமாரோஸ் காட்டம்
தமிழ்நாட்டில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி மலர்ந்திட கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அயராது பாடுபடுவோம்" என்று கூறியுள்ளார். அவரின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறார்கள். கட்சிக்குள்ளேயும், வெளியேயும் தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications