குடி போதைக்கு கொடி பிடிக்கும் லியோ பாடல்.. விஜய்க்கு எதிராக புகார்.. கொலை மிரட்டல் விடுத்த ரசிகர்கள்
சென்னை: லியோ பட பாடலில் போதை பொருட்களை உபயோகிக்கும் வகையில் இளைஞர்களை தூண்டும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து புகார் அளித்தவர் மீது ரசிகர்கள் தொடர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்த விஜய் எப்போதும் குடி போதையிலேயே இருப்பார். கல்லூரிக்கு கூட குடித்து விட்டுதான் வருவார். அந்த படத்தை பற்றி பெரிய அளவில் யாரும் சர்ச்சையை கிளப்பவில்லை. இந்த நிலையில் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளியானது.

இந்த பாடலில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் வாயில் சிகரெட்டுடன் விஜய் வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் அளித்துள்ள மனுவில், நாட்டில் நடக்கக் கூடிய நல்லவை, கெட்டவை அனைத்திற்கும் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு கண்டு வருகிறேன். தற்போது தமிழக அரசும், காவல்துறையும் போதை தடுப்பு விழிப்புணர்வு செய்து பல குற்ற செயல்களை தடுத்து வருகிறார்கள். போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், மேலும் ரவுடியிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் அண்ணன் நான் வரவா நான் ரெடியா இருக்கேன் தனியா வரவா என்ற பாடல் வரிகளில் நடிகர் விஜய் இதுபோன்ற சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும் செயல்களை இளைஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தில் போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே நடிகர் விஜய் மீது போதை தடுப்பு சட்டம் 1985 போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் பாடலை வெளியீடு செய்த நபர்கள் மீது சட்டப்பிரிவு 31-A படியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் சமீபத்தில் போதை பொருளை ஆதரிக்கும் வகையிலும் போதை பொருட்களை தடுப்பதில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை பாயும் என்று கூறியிருந்தார்.
ரவுடியிசத்தை தூண்டுதல், தீய போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு இளைஞர்களை தூண்டி விடுதல் போன்ற குற்றத்திக்காக இந்திய தண்டனை சட்டத்தின் சட்டத்தின் கீழ் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பனையூர் முகவரி மற்றும் சாலிகிராமம் முகவரிக்கு ஆர்.டி.ஐ.செல்வம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அனுப்பியதை தெரிந்து கொண்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட நபர்கள் தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இது குறித்து போலீஸில் புகார் அளிக்க இருப்பதாகவும் செல்வம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications