கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு.. உடனே அனுமதி வழங்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு, மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "கீழடி பேசட்டும்! வரலாறு எழட்டும்! கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு, ஒன்றிய பாஜக அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு கோரியுள்ளது.

இதற்கான முன்மொழிவுகள் 2025ம் ஆண்டு ஜூலை மாதமே சமர்ப்பிக்கப்பட்டு, நவம்பர் மாதம் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) தலைமை இயக்குநரின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், 8 மாதங்களாக இந்த அனுமதி நிலுவையிலேயே உள்ளது. மீண்டும் மீண்டும் நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறோம், ஆனால் மீண்டும் மீண்டும் அது புறக்கணிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே நடைபெறும். இந்த கால இடைவெளியைத் தவறவிட்டால், பருவமழைக் காலம் களப்பணிகளைத் தடுத்துவிடும்; இது முக்கியமான ஆய்வுகளைத் தாமதப்படுத்துவதோடு, 2025-2026 ஆம் ஆண்டிற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியையும் வீணடிக்கும்.
நான் கேட்க விரும்புவது ஒன்றுதான், ஏன் இந்தத் தயக்கம்? தமிழ நாகரிகத்தின் தொன்மை இந்தியாவைக் குறைத்து மதிப்பிடாது. அது இந்தியாவின் நாகரிகப் பெருமையையே கூட்டும். பாஜக அரசு எதைக் கண்டு பயப்படுகிறது? அகழ்வாராய்ச்சிகளுக்கு உடனே அனுமதி வழங்குங்கள்; வரலாறு பேசட்டும்!" என பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications