பாஜக தனித்து போட்டியிடுவது புதிதல்ல.. எதற்கும் தயாராக இருப்போம்.. கேசவ விநாயகம் பரபரப்பு
சென்னை: பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுவது புதிதல்ல என்றும் இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் பலமுறை தனித்து போட்டியிட்டிருக்கிறோம் என்றும் அக்கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் கூறியுள்ளார்.
சென்னை அமைந்தகரை தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்களாக இருக்கக்கூடிய பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா, மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், கே.வி ராமலிங்கம், வி.பி.துரைசாமி மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு முன்பாகவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்து விட்டதால் மேடையில் எச் ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அமர்ந்திருக்கும் போது, அனைத்து நிர்வாகிகளும் வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 65 மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கலந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில் ஏன் இன்னும் கூட்டத்தை தொடங்கவில்லை என கேள்வி எழுப்பினார்கள் ?
மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தான் இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியிருக்க வேண்டும். அண்ணாமலை 11:30 மணி அளவில் தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருவார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தலைவர் வருவதற்கு கால அவகாசம் ஆகும் என தெரிவித்ததை அடுத்து உடனடியாக கூட்டத்தை தொடங்குங்கள். அவர் வரும்போது கூட்டத்தில் கலந்து கொள்ளட்டும் என தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த கூட்டத்தில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு இந்த கூட்டம் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில்நிர்வாகிகள் மத்தியில் பேசிய பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடுவது புதிதல்ல என தெரிவித்தார். எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ள கேசவ விநாயகம், தமிழகத்தில் பாஜக பலமுறை தனித்து போட்டியுள்ளதாகவும் கூறினார் கேசவ விநாயகம். அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தனித்து போட்டியிடுவது பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கேசவ விநாயகம்.
முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாஜக துணைத்தலைவர்கள், மாநில தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று கூறினர். கூட்டணி பற்றி தேசிய தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் கூறினார். அதே போல அண்ணாமலை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும் துணைத்தலைவர் ராமலிங்கம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications