பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு.. பிடிஆர் பேசுவதற்கு முன்பே அதிமுக அமளி.. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக இ பட்ஜெட்டை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இ பட்ஜெட் என்பதால் இன்று அவையில் காகிதங்கள், கோப்புகள் எதுவும் பயன்படுத்தப்படாமல் முழுக்க முழுக்க சட்டசபை கணினிமயமாக்கப்பட்டு இருந்தது.
இதற்காக அவையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோருக்கும் கணினி கொடுக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொருவரின் இருக்கைக்கு முன்பு கணினிகள் பொருத்தப்பட்டு இருந்தது.

ஏற்பாடு
இன்று அவை தொடங்கியதும் முதலில் சபாநாயகர் அப்பாவு இ பட்ஜெட் குறித்த விவரங்கள் வெளியிட்டார். நிதி நிலை அறிக்கையை கணினியில் எவ்வாறு இயக்குவது என்று சபாநாயகர் விளக்கமளித்தார். பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அதன் நகல்கள் அங்கு இருக்கும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும். ஆனால் இது இ பட்ஜெட் என்பதால் இந்த முறை பட்ஜெட் விவரங்கள் பெரிய திரையில் செய்தியாளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.

திருக்குறள்
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு, என்று திருக்குறளை கூறி நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால் இவர் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்குவதற்கு முன்பே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக அதிமுகவினரை பேச அனுமதிக்க வேண்டும். எங்களின் கருத்துக்களை சொல்ல அனுமதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர்.

அனுமதி வேண்டும்
எங்களை பேச அனுமதித்துவிட்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்து அதிமுகவினர் அமளியில் ஈடுப்பட்டனர். ஆனால் சபாநாயகர் அப்பாவு, நீங்கள் எல்லோரும் அமளியில் ஈடுபடாமல் அமைதியாக இருங்கள். முதலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படட்டும். பட்ஜெட் தாக்கலுக்குப்பின் எல்லோருக்கும் பேச அனுமதிக்கிறேன்.

வெளிநடப்பு
இப்போது அமளியில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார். ஆனால் இதை கேட்காமல் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து அமருங்கள், அமைதியாக இருங்கள் என்று கூறினார். ஆனால் தொடர்ந்து பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications