ஆட்டம்.. பாட்டம்.. LGBTQ+ மக்கள் உற்சாகம்.. சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணி!
சென்னை: LGBTIQA+ மக்கள் 'பிரைட்' மாதமாக கடைபிடிக்கும் ஜூன் மாதத்தையொட்டி, சென்னையில் இன்று 15வது தமிழ்நாடு சுயமரியாதை வானவில் பேரணி கோலாகலமாக நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
LGBTIQA+ மக்கள் தங்கள் பெருமைமிகு மாதமாக கருதும் ஜூன் மாதத்தில் பிரமாண்ட பேரணியினை உலகெங்கும் நடத்தி வருகின்றனர். LGBTIQA+ மக்கள் 'வானவில் கூட்டணி' என்ற பெயரில் அமைப்பு நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானவில் சுயமரியாதை பேரணியை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டுக்கான வானவில் சுயமரியாதை பேரணி சென்னையில் நடைபெற்றது. தங்களது உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்தப் பேரணியை நடத்தினர். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி சிந்தாதிரிப்பேட்டை லேங்க்ஸ் தோட்ட சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.
சென்னை மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். குறிப்பாக இந்த ஆண்டு இளம்பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர். ஏராளமான திருநங்கைகளும் ஆர்வத்துடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். LGBTIQA+ மக்களின் பெற்றோர் சிலரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடுகளை விடுத்து தம் உணர்வுகளுக்கு தகுந்தாற்போல பல வண்ண ஆடை அணிந்து, சிகை அலங்காரம், முக அலங்காரம் செய்து பேரணியில் நடனமாடி மகிழ்ந்தனர். மேளம், தப்பு தாளம் முழங்க, ஆடிப்பாடி உற்சாகத்தில் திளைத்தனர்.
LGBTQ+ மக்கள் மட்டுமின்றி அவர்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் கலந்துகொண்டனர். 'எங்கள் பாலினம் எங்கள் உரிமை', 'எனது உடல் எனது உரிமை' போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இந்தப் பேரணியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. தங்கள் இருப்பை அங்கீகரித்து, உரிமையை நிலைநாட்ட அரசு பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications