பிரீமியம் தொகையை உயர்த்தும் காப்பீட்டு நிறுவனங்கள்.. சாமானிய மக்கள் இன்சூரன்ஸ் எடுப்பது கஷ்டம்தான்!
சென்னை: எல்ஐசி, ஹெச்டிஎஃப்சி லைஃப், மற்றும் எஸ்பிஐ லைஃப் போன்ற காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் பிரீமியம் தொகையையும், காப்பீட்டின் கால அளவையும் அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் சாமானிய மக்கள் காப்பீடு எடுப்பது சிக்கலானதாக மாறியிருக்கிறது.
குறைந்த மதிப்புடைய பாலிசிகள் விரைவாக முடிவடைவதை தடுப்பதும், நீண்ட காலத்திற்குப் பாலிசிகளைப் புதுப்பிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மட்டுமல்லாது காப்பீட்டு நிறுவனங்களுக்கும், பாலிசிதாரர்களுக்கும் இடையே ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்கவும் இந்த முடிவு உதவும் என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த வருமானம் கொண்டவர்கள் சிறிய பாலிசிகளை எடுத்த சில மாதங்களிலேயே பிரீமியம் செலுத்த முடியாமல் கைவிடுவதை காப்பீட்டு நிறுவனங்கள் கவனித்துள்ளன. எனவேதான் பிரீமியம் தொகை மற்றும் காப்பீடு கால அளவை நீட்டிருக்கின்றன. இப்படி செய்யப்பட்ட பிறகு தங்களது பாலிசிகளின் சராசரி மதிப்பு ஆண்டுக்கு 23% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது என எல்ஐசி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சிம்பிளாக சொல்வதெனில், முன்னாடி எல்லாம் ரூ.50,000, ரூ.1 லட்சம் என மதிப்பில் பாலிசிகள் இருந்தன. ஆனால், இப்போது அதெல்லாம் இல்லை. குறைந்தப்பட்ச தொகையாக ரூ.3-5 லட்சம் வரை மாற்றப்பட்டிருக்கின்றன. எனவே மாதம் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரை பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். சென்னையில் ரூ.20,000 வருமானத்தில் பிழைப்பை தள்ளும் சாமானியர்களால் நிச்சயம் மாதம் ரூ.2,000 சேர்த்து வைக்க முடியாது. ஒன்றிரண்டு மாதம் வேண்டுமானால் முடியலாம். ஆனால், எல்லா மாதங்களுக்கும் முடியாது. எனவே காப்பீடு நிறுவனங்களின் மாற்றம், சாமானிய மக்களை பாதித்திருக்கிறது.
மறுபுறம் பிரீமியம் தொகையை உயர்த்தியதன் மூலம் நடுத்தர வருமானம் கொண்டவர்கள் பலனடைவார்கள். இது காப்பீடு விஷயத்திலிருந்து சாமானிய மக்களை விலக்கி வைக்கும் நடைமுறை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை சூழலில் காப்பீடு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானதாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை 95% மக்கள் தனியார் நிறுவனங்களில்தான் வேலை பார்க்கிறார்கள். அதிலும் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை விட சாதாரண எம்எஸ்எம்இ நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இந்த நிறுவனங்கள் பிஎஃப் உள்ளிட்ட வசதிகளை கூட வழங்குவது கிடையாது. ஒவ்வொரு நாளும் 10-12 மணி நேரம் வரை மாடாக உழைத்து கடைசியில் தொழிலாளி உயிரிழக்கும்போது நிறுவனங்களால் எந்த உதவியும் செய்யப்படுவதில்லை.
எனவேதான் சொந்தமாக காப்பீடு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் காப்பீடு நிறுவனங்கள் பிரீமியம் தொகையை உயர்த்தியதன் மூலம், அதை பெற முடியாத நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications