"சென்னையில் பெய்த மழையை போல.. தமிழகத்திலும் முதலீடு மழையாக பெய்யும்.." முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: இன்று சென்னையில் தொடங்கியுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய கருத்துகளைக் கூறினார்.
புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

உலகெங்கும் இருந்து பல முக்கிய நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலின்: இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், " இந்த முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இன்று காலை மழை பெய்தது, அதேபோல முதலீடுகளும் மழையாகப் பெய்யும் என நம்புகிறேன்.
இந்த மாநாட்டைச் சிறப்பாக நடத்திக்காட்டிய தம்பி டிஆர்பி ராஜாவுக்கு பாராட்டு. மேலும், வெகு சிறப்பாக நடத்திய துறை சார்ந்த அதிகாரிகளுக்குப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் மாநிலமாகத் தமிழகம் இருந்து வருகிறது... நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான்.. நாட்டின் மற்ற மாநிலங்களுக்குத் தமிழகம் தான் முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

முதலீட்டாளர்கள்: திருவள்ளுவர், கணியன் பூங்குன்றனார் பிறந்த மண்ணுக்கு இப்போது முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். தமிழக பொருளாதாரம் அதிவிரைவு பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.. மாநிலத்தின் முதலீடு ஈர்ப்பைத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் கொரியா நாடுகள் பார்ட்னர்களாக உள்ளன.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, தலைமைத்துவம், நீட்டித்த வளர்ச்சி குறித்து இந்த மாநாடு நடக்கிறது.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.. பொதுவாக ஆட்சி மீது நல்லெண்ணம் இருந்தால் மட்டுமே முதலீடுகள் வரும்.. சட்ட ஒழுங்கு, உட்கட்டமைப்பு ஆகியவையும் முதலீடுகளைப் பெற அவசியம்.. அப்போது தான் முதலீட்டாளர்கள் முதலீடுகளைச் செய்வார்கள்.
அதிவேக வளர்ச்சி: 2021 ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தொழிற்துறை வேகமாகப் பணித்து வருகிறது.. பெண்களுக்கான திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது.. கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழகம் முதன்மையாக இருக்கிறது.. முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் இருக்கிறது இந்தியாவில் முதலீட்டாளர்களை வரவேற்கும் மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது..
அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த வல்லுநர்களைக் கொண்டுள்ளது.. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளோம்.. ஒவ்வொருவரையும் அவரவர் மாவட்டங்களிலேயே வேலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் கடந்த 2.5 ஆண்டுகளில் பெரும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 200 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.. கடந்த 2 ஆண்டுகளில் பல தொழில் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன..
உலகின் சிறந்த நிறுவனங்களை fortune 500 என்று அழைப்பார்கள். அதில் 130 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுகளைச் செய்துள்ளனர். இப்போதும் முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்துள்ளன. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்க வந்துள்ளன.. உங்களுக்குத் தமிழக அரசு துணை நிற்கும். உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம் நீங்கள் தொழில் தொடங்க நாங்கள் உதவுவோம். ஏனென்றால் இது சொன்னதைச் செய்யும் அரசு" என்றார்.












Click it and Unblock the Notifications