நிவர் புயல்- அவசர உதவி எண்கள்: மாநில எண்: 1070; மாவட்ட எண்:1077- முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?
சென்னை: தமிழக கரையை நோக்கி நிவர் புயல் நகர்ந்து வரும் நிலையில் மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அவசர உதவி எண்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
வங்க கடலில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழக கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநில, மாவட்ட உதவி எண்கள்
இதனிடையே மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் புயல் கால அவசர உதவி எண்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளது. மாநில அளவில் அவசர உதவி எண் 1070, மாவட்டங்கள் அளவில் 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் புயல் கரையை கடக்கும் போது திடீரென காற்றின் வேகம் குறையும்; அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம்; புயல் கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கதவுகளை மூடவும்
மேலும் சூறைக்காற்று வீசும் நேரத்தில் ஜன்னல்கள், கதவுகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஆகையால் ஜன்னல், கதவுகளை மூடி வைக்க வேண்டும்.

வாகன பயணம் வேண்டாம்
புயல் காலத்தில் மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டா; புயல் கரையைக் கடக்கும் போதும் வாகனத்தில் பயணிக்க வேண்டாம்; புயல் எச்சரிக்கை திரும்பப் பெற்ற பின்னர்தான் வாகனத்தில் பயணிக்க வேண்டும்.

சமூக வலைதளங்களை தொடருங்கள்
புயல் அறிவிப்புகள், அறிவுரைகளை தொடர்ந்து கேட்டு வாருங்கள். அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள், அறிவுரைகளுக்கு வானொலி, தொலைக்காட்சி மற்ரும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முகநூல், ட்விட்டர் பக்கங்களை பின் தொடர்ந்து வாருங்கள்.

நீங்கள் வெளியில் இருக்கிறீர்களா?
புயல் காலத்தின் போது நீங்கள் வெளியில் இருந்தால் அருகில் உள்ள பாதுகாப்பு மையங்களுக்கு செல்லவும். அல்லது பாதுகாப்பான கட்டடங்களுக்குள் சென்று தங்க வேண்டும். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications