தமிழக அமைச்சர்களுக்கு அரசு பங்களா.. ஓபிஎஸ் வீடு அன்பில் மகேஷூக்கு ஒதுக்கீடு யார் யாருக்கு எந்த வீடு?
சென்னை: ஆட்சி மாற்றம் ஏற்பட்தையடுத்து தமிழகத்தின் புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இப்போது வரை 30 அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யார் யாருக்கு எந்த வீடு ஒதுக்கீடு என்பதை இப்போது பார்ப்போம்.
முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வசித்த வீடு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருந்த பங்களா ஐ.பெரியசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் வசிப்பதற்காக 76 பங்களாக்களை அரசு கட்டியுள்ளது. ஒவ்வொரு பங்களாவும் 10 கிரவுண்டுக்கு மேலான நிலப்பரப்பு உடையது ஆகும், சபாநாயகருக்கான பங்களா மட்டும் 1 ஏக்கர் நிலப்பரப்பு உடையது ஆகும்.. பங்களாக்களில் அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.
அரசு பங்களாக்களை காலி செய்த முன்னாள் அமைச்சர்கள்... விரைவில் குடியேறும் புதிய அமைச்சர்கள்..!
தனி தனி பெயர்
குறிஞ்சி, முல்லை, பொதிகை, வைகை, என அனைத்து பங்களாவுக்கு தனி தனிப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பங்களாக்கள் அனைத்தையும் பொதுப்பணி துறையினர் பராமரித்து வருகிறார்கள். பங்களாக்களில் மராமத்து பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள், உடனடியாக அரசு செலவில் சீரமைத்து தருவார்கள் .
முன்னாள் அமைச்சர்கள்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக அரசு பங்களாக்களில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர்கள் தற்போது அதை காலி செய்து வருகின்றனர். இதையடுத்து புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை ஒதுக்கீடு பணியை பொதுப்பணி துறையினர் இப்போது மேற்கொண்டு வருகின்றனர்.
ஒபிஎஸ் வீடு
அதன்படி முன்னாள் சபாநாயகர் தனபால் வசித்த பங்களா தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசித்து வந்த பங்களா பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருந்த பங்களாவில் ஐ.பெரியசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கேபி அன்பழகன்
முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வசித்த வீடு அமைச்சர் சேகர் பாபுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வசித்த வீடு, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எம்ஆர் விஜயபாஸ்கர் வசித்த வீடு, அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு வசித்த வீடு, அமைச்சர் கீதா ஜீவனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரகுபதி
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வசித்த சிறுவாணி இல்லம் தற்போது சட்ட அமைச்சர் ரகுபதி ஒதுக்கப்பட்டுள்ளது.முன்னாள் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வசித்த தாமிரபரணி இல்லம் தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வசித்த வைகை இல்லம் தற்பொழுது வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தா.மோ.அன்பரசன்
முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வசித்த மனோரஞ்சிதம் இல்லம் தற்போது ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வசித்த இல்லம் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வசித்த காவேரி இல்லம உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வசித்த இல்லம் துணை சபாநாயகர் பிச்சாண்டிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வசித்த இல்லம், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வசித்த எழில் இல்லம் தற்போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசு
முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வசித்த அன்பு இல்லம் தற்பொழுது வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வசித்த திருவரங்கம் இல்லம், தற்பொழுது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வசித்த இல்லம், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வசித்த இல்லம், தமிழக அரசு கொறடா கோவி.செழியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வசித்த இல்லம், தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி வசித்த இல்லம், தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வசித்த இல்லம், தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜகண்ணப்பன்
முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வசித்த இல்லம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.முன்னாள் அரசு கொறடா ராஜேந்திரன் வசித்த இல்லம், தற்போது வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வசித்த இல்லம், தற்பொழுது போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் கதர் கிராமத் தொழில் அமைச்சர் பாஸ்கரன் வசித்த இல்லம், தற்போது வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வசித்த எல்லாம், தற்போது காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் வசித்த இல்லம், தற்போது கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வீடு ஒதுக்கீடு இல்லை
சென்னையில் வசிக்கும் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்ரமணியம், எ.வ.வேலு ஆகியோருக்கு இதுவரை அரசு பங்களாக்கள் ஒதுக்கப்படவில்லை. அவர்களுக்கு சென்னையில் சொந்த வீடு இருக்கிறது. அவர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்க்கட்சி தலைவர்
எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக இருப்பதால் தற்போது வசிக்கும் பங்களாவில் அவர் தொடர்ந்து வசிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சில முன்னாள் அமைச்சர்கள் பங்களாக்களை இன்னும் காலி செய்யாமல் உள்ளனர். இதனால் ஒரிரு வாரங்களில் அமைச்சர்களிடம் பங்களாக்களை ஒப்படைக்கும் பணியை பொதுப்பணி துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்.