வாழும் காந்திகள்... இன்று இந்த காந்திகளையும் வாழ்த்துவோம்... பாராட்டுவோம்!
சென்னை: இன்று மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள். நாடே இந்த அகிம்சாவாதியை நினைவு கூர்ந்து நன்றி கூறி வருகிறது.
நம்மிடையே நிறைய வாழும் காந்திகளும் உள்ளனர். பெயர்களில் மட்டுமல்லாமல், செயல்களிலும் கூட ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்து தங்களது பெயருக்கும் நியாயம் கற்பித்து வாழுவோர் அதிகம் உள்ளனர்.
இக்காலத்திலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களே என்று ஆச்சரியப்படுவதோடு நிற்காமல் அவர்களுக்கு உரிய ஊக்கத்தை அளிக்கும் சமூகமாக நாம் மாற வேண்டும் என்பதே நமது ஆசை.. இதோ நம்மிடையே வாழும் காந்திகளை உங்கள் முன் அறிமுகப்படுத்துகிறோம்.. வாழ்த்துங்கள்.
மோகன்தாஸ் காந்தி
நமது வாசகர் மோகன்தாஸ். 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கடந்த 15 வருடமாக ஹோட்டல் துறையில் பணியாற்றி வருகிாறார். தற்போது பணியிடம் துபாய். இதுவரை இவர் மூலமாக வேலை வாய்ப்பு பெற்றோர் 400க்கும் மேற்பட்டோர் என்று பெருமையுடன் கூறுகிறார். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பலருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். பாராட்டுவோம்.!
பெரம்பலூர் ஜெயகாந்தி
இவர் ஜெயகாந்த். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர். தீவிர காங்கிரஸ் தொண்டர். கதர் ஆடைகளை மட்டுமே அணிபவர். தனது மகனுக்கு ஜெயகாந்தி என்றும் மகளுக்கு இந்திரா காந்தி என்றும் பெயர் வைத்தவர். ஜெயகாந்தி துபாயில் கடந்த 1993ம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். துபாய்க்கு வந்த பிறகுதான் தனது பெயரில் உள்ள காந்திக்கு எத்தனை மகிமை என்பதை உணர்ந்து மெய் சிலிர்த்துள்ளார். காந்திக்கு நீங்கள் உறவா என்று கேட்டபோது நெகிழ்ந்து போனாராம். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் முதுநிலை படிப்பை முடித்த ஜெயகாந்தி, 1998ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கம்ப்யூச்சர் பிசினஸில் இறங்கினார். காந்தி என்ற பெயர் தனக்கு மிகப் பெருமையைத் தேடிக் கொடுத்ததாகவும், கடினமான உழைப்பால் இன்று நல்ல நிலையில் இருப்பதாகவும், இந்தப் பாடத்தை மகாத்மா காந்தியிடமிருந்து கற்றுக் கொண்டதாகவும் பெருமையுடன் கூறுகிறார் ஜெயகாந்தி.
ராணுவ வீரரின் மகன்
இந்த வாசகரின் பெயர் கோ. காந்தி குமார். இவரது தந்தை ஒரு முன்னாள் ராணுவ வீரர். காந்தி குமார் 5.5.1974 அன்று பிறந்தார். இவர் தன்னைப் பற்றி பெருமையாக சொல்வது.. நான் கண்ட இடத்திலும் எச்சில் துப்புவதில்லை. பொய் சொன்னதில்லை. வீட்டிலும் வெளியிலும் பொய் சொல்வதைத் தவிர்த்து வருகிறேன் என்று பெருமையுடன் கூறுகிறார் காந்தி குமார். பாராட்டலாம் காந்தி குமாரை.
மோகன்தாஸ்
இதோ இன்னும் ஒரு மோகன்தாஸ் காந்தி. அவர் சொல்வதைக் கேட்போம்... வணக்கம் என்னுடைய பெயர் மோகன் தாஸ் காந்தி . எனது தந்தை பெயர் காந்தி. எனது தாத்தா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவர் எனது தந்தைக்கு காந்தி என்று பெயர் வைத்தார். அவர் எனக்கு மோகன்தாஸ் காந்தி என்று பெயரிட்டார். எனது தாத்தா சோமசுந்தரம் பிள்ளை பர்மிய அரசில் பணியாற்றியவர். பின்னர் தனது வேலையை விட்டு விட்டு சுபாஷ் சந்திர போஸ் ராணுவத்தில் இணைந்தார். எனது தாத்தா இறந்தபோது எனது தந்தைக்கு 7 வயது. எனது தந்தை கடைசி வரை காந்திய வழியிலேயே வாழ்ந்தவர். அவரது வழியில் நானும் சமுதாயத்துக்கு என்னால் ஆனதைச் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டு அதைக் கடைப்பிடித்தும் வருகிறேன். எனது சொந்த ஊர் மதுரை. தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் மோகன்தாஸ் காந்தி.
ராஜீவ்
வணக்கம் சார். காந்தி பெயர் கொண்டவர்கள் மனதில் ஒரு எண்ணம் இருக்கும் . அதே போல் எனக்கும். என்னுடைய பெயர் ராஜிவ்காந்தி. ஊர் நாமக்கல் மாவட்டம், ராசிபுரதில் வசிக்கிறேன். எனக்கும் நாட்டில் பல மாற்றங்களை மாற்றினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மனதில் இருக்கும். சில விஷயங்களை பகிர்கிறேன். மற்ற நாடுகளை பார்க்கும் போது ஏன் நம் நாடு இப்படி உள்ளது. என்று அடிக்கடி எண்ணிக்கொண்டிருப்பேன். மற்ற நாட்டு மக்கள் தொழில் நுட்பததிலும் , வசதி போன்றவையில் நன்றாக இருக்கிறார்கள்.நம் நாடு மட்டும் இப்படியென்று . நம் நாடு ஜாதி மற்றும் மொழியாலும் பிரிந்து இருக்கிறார்கள். நான் ஒரு தலைவராக இருந்தால் இந்த நாட்டையே மாற்றியிருப்பேன் என்று நினைப்பேன். நினைக்கத்தான் முடியும் நம்மால். செயல்பட நம்மிடம் ஆட்சி இல்லையே என்று. பல மொழி பேசும் மற்ற நாட்டு மக்கள் . ஏன் நம் நாட்டில் மட்டும் ஒன்னு அல்லது இரண்டு மொழி பேசுகிறார்கள். அதற்குமேல் பேச அவர்களால் முடியவில்லை.காரணம் பள்ளியில் படிக்கின்ற மொழி தான் வாழ்க்கையில் துணை வரும். இந்தியை அனுமதிக்காதே என்று சொல்லும் நாம் எல்லாரும் இந்தியன் .ஒரே நாடு. இப்படி இருக்க இந்தியாவில் இருக்கும் மொழி தானே அது ஏன் மாணவர்கள் கற்று தெரிந்து கொள்ளக்கூடாது. அது மொழி தானே ஜாதி ஒன்றும் இல்லையே. நான் மட்டும் தலைவராக இருந்தால் நாட்டில் அனைத்து மொழியும் பேச அனுமதி அளிப்பேன். நாட்டை மாற்றுவேன் என்ற எண்ணம் எனக்கு இருக்கும் அவ்வளவு தான்.
டாக்டர் மோகன்தாஸ்
கோவை ஆர்விஎஸ் கல்லூரியில் சிவில் என்ஜீனியரிங்த் துறை தலைவராக பணியாற்றி வருபவர் முனைவர் ஆ.க. மோகன்தாஸ் காந்தி. இவர் தனது சாதனையாக சொல்வது எந்த போதைப் பழக்கமும் தன்னிடம் இல்லை என்பது. நிச்சயம் இந்தக் காலத்தில் இது மிகப் பெரிய சாதனைதான்.. இன்றைய இளைஞர்கள் இதை நல்ல ரோல்மாடலாக பின்பற்ற முன்வர வேண்டும்.
பாபு
நமது தீவிர வாசகர்களில் ஒருவர் பாபு காந்தி. இவர் தனது வாழ்நாலளில் இதுவரை ஒரு பொய் கூட சொன்னதில்லையாம். புகை பிடித்ததில்லை. மது அருந்தியதில்லை. எந்த போதைப் பொருளையும் தொட்டுக் கூட பார்த்ததில்லை என்கிறார். ஏன் வெற்றிலை கூட போடுவதில்லை என்றும் பெருமையுடன் கூறுகிறார். சிறப்பான குணங்கள் இருப்பதை விட கெட்ட பழக்கங்கள் இல்லாமல் இருப்பதே நல்ல வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பது பாபுவின் கூற்று. சபாஷ் சார்!