கண்டிஷன் எதற்கு.. அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 தர வேண்டும்..எடப்பாடி பழனிச்சாமி
ரூ.2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசு கடன் வாங்கியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 2 லட்சம் கோடி ரூபாய்க்கு தமிழக அரசு கடன் வாங்கியுள்ளதாகவும், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கவேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். ரூ. 20 கோடியில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் நிறுவப்படும். அதிக சுற்றுலா பயணிகள் வருவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசு உருவாக்கியுள்ள சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தகுதி வாய்ந்த குடும்பங்களின் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கை வாசிக்கும் போதே சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் உரை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி உயர்த்தப்பட்டதுதான் மக்களுக்கு கொடுத்த பரிசு என்று குற்றம் சாட்டினார். கல்வியில் பின்னடைவு ஏற்பட்டதை கண்டித்தும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக குறிப்பிட்டார்.

கடன் சுமை அதிகரிப்பு
திமுகவின் 23 மாத கால ஆட்சியில் ஒன்றரை லட்சம் கோடி கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மேலும் 91000 கோடி கடன் வாங்குவதாக கூறியுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கினாலும் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு தேவையான நிதிகளை ஒதுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

பற்றாக்குறை பட்ஜெட்
வரி வருவாய் உயர்ந்தும் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டது ஏன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்த காரணத்தால் பற்றாக்குறை ஏற்பட்டது என்று கூறினார்.

வருமானம்
கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா பரவியது. 15 மாதங்கள் தொழிற்சாலைகள், கடைகள் மூடப்பட்டன. வரி வருமானம் நின்று போனது. வருமானம் குறைந்து செலவு அதிகரித்தது. திமுக ஆட்சி காலத்தில் கொரோனா குறைந்து வரி வருமானம் அதிகரித்தது. பிறகு ஏன் பற்றாக்குறை நிலவுகிறது என்று கேட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் யார்
திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. கடன் சுமை அதிகரித்து விட்டது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால் தற்போது தகுதிவாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மட்டுமே ரூ.1000 தரப்படும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications