9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: கலகலக்க காத்திருக்கும் திமுக, அதிமுக கூட்டணிகள்!
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக, அதிமுக கூட்டணிகளில் சலசலப்பு ஏற்படுகிற காட்சிகள் அரங்கேறும் என்றே கூறப்படுகிறது.
தமிழகத்தில் நிலுவையில் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்த இந்த தேர்தலை ஒரு வழியாக அறிவித்து விட்டது மாநில தேர்தல் ஆணையம்.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாள் 22-ந்தேதி.

வேட்புமனுத் தாக்கல்
வேட்பு மனுவை தாக்கல் செய்ய மொத்தம் 7 நாட்கள் மட்டுமே கொடுத்துள்ளது தமிழக தேர்தல் ஆணையம். வேட்பு மனுத் தாக்கலுக்கு மிக குறுகிய நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் தோழமைக் கட்சிகளின் நிலைமைதான் திண்டாட்டமாக இருக்கப் போகிறது என்கிறார்கள் தோழமைக் கட்சியின் இரண்டாம் நிலைத்தலைவர்கள்.

சட்டசபை தேர்தல் கூட்டணி
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சி.பி.ஐ., சி.பி.எம்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதேபோல, அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இது தவிர டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுடன் தேமுதிக கூட்டணி வைத்தது. கமலின் மக்கள் நீதி மய்யதோடு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கைக்கோர்த்தது. நாம் தமிழர் கட்சி மட்டுமே வழக்கம் போல தனித்து போட்டியிட்டது. தற்போதைய ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடருமா என்பதுதான் இப்போது கேள்விக்குறி.

திமுக அணி நிலவரம்
கிராம பஞ்சாயத்துகளைத் தவிர்த்து மற்ற நிலைகளில் உள்ள பதவிகளுக்கு கட்சி சார்ந்த வேட்பாளர்களே நேராடியாக போட்டியிடுவர். அதனால் திமுகவிடமிருந்து கணிசமான, கவுரவமான இடங்களை வாங்கி போட்டியிட வேண்டும் என நினைக்கிறது காங்கிரஸ் கட்சி. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மொத்த பதவிகளில் குறைந்தபட்சம் 10 முதல் 15 சதவீத இடங்களில் போட்டியிட துடிக்கிறது காங்கிரஸ். இதேபோல ஒவ்வொரு கட்சியும் கணக்குகளை கூட்டிக் கழித்துப் போட்டு வருகின்றன. சதவீத அடிப்படையில் இடங்களை கைப்பற்ற காய்களை நகர்த்து வருகின்றன. ஆனால், திமுக தலைமையோ, 15 சதவீத இடங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 85 சதவீத இடங்களில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. இந்த சதவீத கணக்கில் கொஞ்சம் மட்டும் கடைசி நேரத்தில் மாற்றப்படலாம்.

திமுக மா.செ.க்களுக்கு அதிகாரம்
மேலும் 9 மாவட்டங்களிலும் உள்ள திமுக மா.செ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி கட்சிகள் தங்களுக்குரிய இடங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவாலய தலைமை முடிவு செய்திருப்பதாக அறிய முடிகிறது. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள், அதன் எண்ணிக்கை ஆகியவைகளை மாவட்ட அளவில் பேசி முடிக்கும் வகையில் மா.செ.க்களிடம் அதிகாரத்தை கொடுத்துள்ளதாம் திமுக. அதனால், கூட்டணி கட்சிகள் மா.செ.க்களிடம் தான் பேச வேண்டியதிருக்கும். ஆனால், வேட்பு மனு தாக்கலுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால் திமுகவுடன் பேசி, கவுரவமான இடங்களை பெற்று, வேட்பாளர்களை தேர்வு செய்து முடிப்பதற்குள் வேட்புமனுவுக்கான கடைசி நாளும் வந்து விடும் என்கிற பதற்றம் கூட்டணி கட்சிகளுக்கு வந்துள்ளது. காரணம், கணிசமான இடங்களையும் கவுரவமான எண்ணிக்கையையும் பெற தோழமைக் கட்சிகள் திட்டமிட்டிருப்பதும், அந்த எதிர்பார்ப்புகளை திமுக நிறைவேற்றுமா என்பதும் கேள்விக்குறியாகத்தான் தெரிகிறது. திமுக தரப்பு கொடுக்கும் இடங்களையும் எண்ணிக்கையையும் தோழமைக் கட்சிகள் பெற்றுக் கொள்வதாக இருந்தால் கூட்டணி நீடிக்கும். இல்லையேல் கூட்டணியில் பிளவு வரலாம் என்கிறார்கள் திமுக கூட்டணி கட்சிகளின் மாநில நிர்வாகிகள்.

தேமுதிக, அதிமுக அணி
இன்னொரு பக்கம் தேமுதிகவுக்கு இப்போதுள்ள ஒரே வாய்ப்பு திமுக கூட்டணிதான். தங்களை உயிர்ப்பித்துக் கொள்ள தேமுதிக, திமுக கூட்டணிக்குதான் போக வேண்டும். அப்படி திமுக அணிக்கு தேமுதிக போனால் அந்த கூட்டணியில் மேலும் சலசலப்பு அதிகரிக்கும். இதேபோலவே அதிமுக கூட்டணியிலும் கருத்து வேறுபாடுகள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவே தமிழக அரசியல் விமர்சகர்களிடம் எதிரொலிக்கிறது.












Click it and Unblock the Notifications