"முடிஞ்சா சுட்டு காட்டுங்க.." சவால் விட்ட தோசை மாஸ்டர்.. சட்டென இறங்கி அசத்திய அண்ணாமலை.. போட்டோ!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் தோசை சுட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டும் இப்படி தனித்து போட்டி, கட்சியை பலப்படுத்த இது உதவியாக இருக்கும். மற்றபடி அடுத்த லோக்சபா தேர்தலில் மீண்டும் கூட்டணி தொடரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் போனை உளவுத்துறை ஒட்டுக்கேட்கிறாங்க! கூடவே ஆள் வச்சு கண்காணிக்கிறாங்க.. அண்ணாமலை பரபர புகார்!
அண்ணாமலை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அதிகாலை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் அண்ணாமலை காலையில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
பாஜக பிரச்சாரம்
பிற்பகலில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அதன்பின் தேர்தல் பணிகளை மேற்கொண்டார். நேற்று சென்னை பாரீஸ் பகுதியில் அண்ணாமலை வார்டு வார்டாக சென்று மாலையில் இருந்து இரவு வரை பிரச்சாரம் செய்தார். சென்னை வார்டு எண்:55-ல், நேற்று இரவு அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு சாலை ஓரத்தில் இருந்த உணவு கடை ஒன்றில் வாக்கு சேகரித்த போது கடை மாஸ்டர் அண்ணாமலைக்கு வித்தியாசமான சவால் ஒன்றை விடுத்தார்.
தோசை சவால்
நீங்க இங்க வந்து ஒரு நல்ல தோசை சுட முடியுமா? நல்ல ஒரு தோசையை நீட்டா சுட்டு காட்டுங்க.. நான் உங்களுக்கு வாக்கு அளிக்கிறேன் என்று குறிப்பிட்டார். இதையடுத்து சவாலை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை தோசை கல்லுக்கு சென்று, கல்லை துடைத்துவிட்டு தோசையை ஊற்றினார். மெல்லிசான தோசை சுட்ட அண்ணாமலை, அதை அழகாக மடித்து மாஸ்டரிடம் கொடுத்தார்.
மாஸ்டர் தோசை
இதையடுத்து மாஸ்டரும் தோசையை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருப்பதாக பாராட்டி உள்ளார். இந்த சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்து அண்ணாமலை, மாஸ்டர் எனக்கு சவால் விட்டபடியே நான் தோசை சுட்டுக்கொடுத்தேன். நான் கொடுத்த ஆவரேஜ் தோசையை சாப்பிட்டுவிட்டு மாஸ்டர் தம்ப்ஸ் அப் காட்டினார். அதோடு பாஜகவிற்கு சொன்னபடியே வாக்கு அளிப்பதாகவும் உறுதி அளித்தார், என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.