"கெளரவ பிரச்சனை".. பெரிய டீமை கொண்டு வரும் அண்ணாமலை.. சென்னை மாநகராட்சிக்கு பாஜகவின் "பிளான் 10"!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட சில இடங்களை குறி வைத்து பாஜக தீவிரமாக இயங்கி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாஜக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், சரியான உடன்படிக்கை எட்டப்படாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து அவதூறாக பேசியதும் இந்த கூட்டணி முறிவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் இது தற்காலிக முடிவுதான் என்று நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார்.

பாஜக தனித்து போட்டி
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டாலும், அக்கட்சி தொண்டர்கள் போட்டியிட பெரிய அளவில் ஆர்வம் காட்டியுள்ளனர். நிர்வாகிகள் பலர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி விருப்பமனு தற்போது வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளனர். வார்டு தேர்தலை ஒரு கெளரவ பிரச்சனையாக பார்க்கிறார்கள் பாஜக கட்சியினர். தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம். அதிமுக தயவு இல்லாமலே வென்று காட்ட வேண்டும் என்று பாஜகவினர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக தயவு
அதிமுக இல்லாமலே நம்மால் வெல்ல முடியும் என்பதை நிரூபிக்க முடியும். அப்போதுதான் எதிர்கால கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிக இடங்களை கேட்க முடியும். இதுதான் கட்சி ரீதியாக பாஜகவை பலப்படுத்த உதவும் என்ற எண்ணத்தில் பாஜகவினர் இருக்கிறார்களாம். இதனால் பாஜகவினர் இடையே இந்த போட்டியிட ஆர்வம் அதிகம் உள்ளதாம். குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன.

சீட் கேட்டு ஆர்வம்
ஒவ்வொரு வார்டுக்கும் குறைந்தபட்சம் 6-க்கும் மேற்பட்டவர்கள் சீட் கேட்டு மோதினர். இதனை வைத்து பார்க்கும் போது, பாஜக நிச்சயம் அசைக்க முடியாத சக்தியாக மாறும் என தேர்தல் பொறுப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. 200 வார்டுகளில் 100 வார்டுகளில் பண பலம் மிக்கவர்களை களமிறக்கியிருக்கிறார் சென்னையின் தேர்தல் பொருப்பாளர் கராத்தே தியாகராஜன்.

10 வென்றால் போதும்
இந்த 100 பேரில் 10 பேர் ஜெயித்தாலே போதும் மாநகராட்சி கூட்டத்தை கலக்கிவிடுவோம் என்கிறார்கள் பாஜகவினர். மாநகராட்சி கூட்டங்களில் 10 பேர் இருந்தால் போது பல முக்கிய விஷயங்களை நிறைவேற்றலாம். 100 பேரில் 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை ஜெயிக்க வைக்க பாஜக பெரும் திட்டம் போடப்பட்டுள்ளது. அதாவது அந்த 25 பேருக்கு கவனம் செலுத்தப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் செய்யப்படும்.
Recommended Video

தேர்தல் வியூகம்
இவர்களுக்காக நிர்வாகிகளை மொத்தமாக களமிறக்கி பாஜக தேர்தல் பிரச்சாரங்களை செய்ய இருக்கிறதாம். பல முக்கிய நிர்வாகிகள் இதனால் சென்னையில் களமிறக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த முயற்சியில் 10 பேர் ஜெயித்தாலே போதும், எல்லாம் நம்ம கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்ற வியூகத்தோடு தேர்தல் சூட்சமங்களில் விளையாட துவங்கியுள்ளதாம் பாஜக. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் இப்போதே சூடு பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications