யார் இந்த "மிஸஸ்" சோனாலி.. அடுத்த மேயர் இவர்தானா? முட்டி மோதும் சீனியர்கள்.. இப்பவே கண்ணை கட்டுதே!
அடுத்த கோவை மேயர் யார் என்பதில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: அடுத்த சென்னை மேயர் யார் என்ற விவகாரம் ஓடிக் கொண்டிருக்கும்போது, அடுத்த கோவை மேயர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. இந்த மேயர் பதவிக்கான போட்டாபோட்டி திமுகவை போலவே அதிமுகவிலும் எழுந்துள்ளது.
மேயர் பதவியில் உட்கார வைக்க, மிக முக்கிய நபர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளாராம் முதல்வர் முக ஸ்டாலின். அந்த வகையில் சீனியர்கள், விஐபிக்கள், முன்னாள்கள் பலர் ரேஸில் உள்ளனர்.
அதேபோல அதிமுகவிலும் இந்த போட்டி எழுந்துள்ளது.. குறிப்பாக பலம் பொருந்திய செந்தில்பாலாஜியின் பிளான்களை தவிடுபொடியாக்க, வலுவான ஒரு நபரை மேயர் பதவியில் உட்கார வைக்க அதிமுக யோசித்து வருகிறது. அந்த வகையில் சில பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

சோனாலி
அதில் ஒரு பெயர்தான் சோனாலி பிரதீப்.. சமூக ஆர்வலர்.. கல்வியாளர் என்ற அறிமுகத்துடன் நடமாடும் பெண்மணி.. கோவையில் அதிமுக கூட்டம் எங்கு நடந்தாலும் அங்கே பளிச்சென ஆஜராவார் சோனாலி. இவர் அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் பெற்றவர்... அதாவது 2019ம் ஆண்டு மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ், மிஸஸ் யுனிவர்ஸ் பியூட்டி பர்பஸ், மிஸஸ் இந்திய தமிழ்நாடு 2017, என பட்டங்களைப் பெற்றவர்.. இவர் பூர்வீகம் குஜராத் ஆகும்.. ஆனாலும், தமிழ்நாட்டிற்கு 2 தலைமுறைக்கு முன்பேயே வந்துவிட்டார்களாம்.

மேயர் பதவி
இவரது கணவர் பெயர் பிரதீப் ஜோஸ்.. மலையாள சினிமா புரொடியூசர்.. சோனாலிக்கு அரசியல் ஆர்வம் அதிகமானதால், அதிமுகவில் இணைந்துள்ளார்.. கோவை வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் இணை செயலாளராகவும் இருக்கிறார். ஆனால், 2019ம் ஆண்டு கோவை மேயர் பதவிக்கு கட்சி சார்பில் விருப்ப மனு தந்தபோதுதான் பலருக்கு இவரை தெரியவந்தது.. இப்போதும் மேயர் பதவிக்கு இவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

சிபாரிசு
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ஒருவர் உதவியுடன் இந்த மேயர் பதவிக்கு முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. இதுதான் சீனியர்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டு வருகிறது.. சமீபத்தில்கூட கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்துள்ளது.. அதில், பல முக்கிய நிர்வாகிகள் கீழே இருக்கும்போது, சோனாலி மட்டும் மேடையில் ஏறி அமர்ந்துவிட்டதாக கோவை அதிமுகவில் புலம்பல்கள் வெடித்துள்ளதாம்.

மரியாதை
இத்தனை வருட காலம் கட்சிக்கு உழைத்து என்ன பலன்? பணமிருந்தால்தான் மரியாதையா என்ற வேதனைகளும் கோவை மாவட்ட அதிமுகவில் ஒலிக்க தொடங்கி உள்ளது.. அதுமட்டுமல்ல, மக்களுக்காக அவர் என்ன செய்துள்ளார்? ஆர்ப்பாட்டம், போராட்டம், கைது என்று எதிலாவது ஈடுபட்டுள்ளாரா? அதை முதலில் செய்யட்டும், அப்பறம் மேயர் பதவிக்கு ஆசைப்படலாம் என்றும் முணுமுணுப்புகள் எழுந்துள்ளன..

திட்டம்?
ஆனால், இந்த விமர்சனங்களை எல்லாம் சோனாலி மறுத்துள்ளார்.. மேடையில் உட்கார்ந்தது எதேச்சையாக நடந்தது.. இதெல்லாம் திட்டமிட்டு செய்யவில்லை.. பணத்தை வைத்தும் செய்வதில்லை" என்று விளக்கம் தந்துள்ளார்.. என்றாலும், கோவை மேயர் பதவி சோனாலிக்கு கிடைக்க போகிறதா? அல்லது சீனியர்கள் கைக்கு போக போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.. ஆனால், கோவை மக்களுக்கு நன்கு பரிச்சயமான, அதேசமயம் திமுகவுக்கு டஃப் தரும் வகையிலான ஒரு முக்கிய நபரையே, மேயராக வேலுமணி முன்னிறுத்தக்கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எனினும், கடந்த முறை இவர் மேயர் பதவிக்கு விருப்ப மனு தந்தபோதே நிறைய விமர்சனம் முன்வைக்கப்பட்டது.. மிசஸ் இந்தியா யூனிவர்ஸ் எர்த் - 2019 பட்டம் வென்றபின், சோனாலி பிரதீப்பை அப்போதைய முதல்வர் பழனிசாமி பாராட்டி வாழ்த்தியிருந்தார்.. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த சமயம் அது.. சோனாலி பிரதீப் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுகவில் விருப்பமனு அளித்தபோது, பலரும் ஆதரவும், எதிர்ப்புமாக விமர்சனங்களை முன்வைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

செந்தில்பாலாஜி
இதனிடையே, மேயர் பதவிக்கு முன்புபோல இந்த முறை அதிமுகவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்கிறார்கள்.. திமுக வலுவாகி உள்ள நிலையில், பொறுப்பாளரான செந்தில்பாலாஜியின் பலவித வியூகங்கள் கைகொடுத்து வரும் நிலையில், அதிமுக தரப்பில் ஒருவித தயக்கம் உள்ளதாம்.. வழக்கமாக போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்த முறை ஒதுங்கி உள்ளதாகவும் செய்திகள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications