பர்த்டே பார்ட்டிக்கு நேரம் இருந்துச்சு.. இப்போ இல்லையாம்.. ஸ்டாலின் மீது சிராக் பாஸ்வான் அட்டாக்
வடமாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டேன் அவர் கொடுக்கவில்லை- சிராக் பாஸ்வான்
சென்னை: தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது குறித்து விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் எனக்கு நேரம் கொடுக்கவில்லை என லோக்ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொய்யான வீடியோ மூலம் வதந்தியை கிளப்பியதால் இந்த பிரச்சினை தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் தாக்கப்பட்டவர்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விவகாரம் பீகார் மாநில சட்டசபையில் எதிரொலித்தது.
இதையடுத்து பீகாரை சேர்ந்த அனைத்து கட்சிகள் கொண்ட குழு ஒன்று தமிழகத்தில் வந்து விசாரணை நடத்தியது. அது போல் அந்த மாநிலத்தின் கட்சியான லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் நேற்றைய தினம் தமிழகத்திற்கு வந்திருந்தார்.
அவர் வடமாநிலத் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கையாகவும் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து சிராக் பாஸ்வான் ஒன் இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டி கேள்வி, பதில் வடிவில்:

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்
கேள்வி: தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்தீர்கள். அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்களா என்பது குறித்து நானாக எந்த கருத்தையும் சொல்ல முடியாது. நான் அவர்களை சந்தித்து விசாரித்த போது அவர்கள் குறி வைக்கப்படுவதாகவும் தாக்கப்படுவதாகவும், அவர்கள் போலீஸில் புகார் கொடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் இது போன்ற வழக்கமான அச்சுறுத்தல்கள் அவர்களுக்கு உள்ளதாக தெரிவித்தனர். இதைத்தான் தமிழகத்தில் வசிக்கும் பீகார் மக்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

பாதுகாப்பு
பீகாரை சேர்ந்த நான் அவர்களது பாதுகாப்பு குறித்து கேட்டறிய வேண்டும். அதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். அவர்களின் பாதுகாப்புக்கு என்னவெல்லாம் செய்வதாக நான் அவர்களுக்கு வாக்கு கொடுத்தேனோ அதையெல்லாம் செய்ய முயற்சிப்பேன். தமிழக ஆளுநரை சந்தித்து, வடமாநிலத் தொழிலாளர்கள் என்னிடம் தெரிவித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என சொல்ல முடியாது. எதுவாக இருந்தாலும் முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியும்.
தண்டனை
நான் தமிழக அரசை கேட்டுக் கொள்வது ஒன்றுதான்- வடமாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் புகார் குறித்து தீர விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் வடமாநிலத்தவர்களை யாராவது தாக்குதல் நடத்தினார்கள் என தெரியவந்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அது போல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்தியை பரப்பும் நபர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். மதம், இனம், மொழி உள்ளிட்டவற்றை வைத்து ஒரு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் யார் வதந்தி பரப்பினாலும் அவர்கள் தண்டனைக்குரியவர்களே!

முதல்வரை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை
கேள்வி: வடமாநிலத்தவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்த நீங்கள் ஏன் தமிழக அரசு சார்பில் யாரையும் சந்திக்கவில்லை?
பதில்: நான் முதல்வர் ஸ்டாலினை பார்த்த முயற்சித்தேன். ஆனால் எனக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. அதற்காக நான் இந்த விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. எனினும் மக்கள் பிரச்சினை குறித்து பேச எனக்கு நேரம் அளிக்காதது வருத்தமாக இருக்கிறது. கடந்த மார்ச் 1 ஆம் தேதி பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்பட வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்களை சந்தித்தீர்கள் (முதல்வர்). ஆனால் தற்போது தமிழகத்தில் சென்சிட்டிவ்வான விஷயம் நடந்துள்ளது. சரியோ தவறோ விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். நானாக இந்த விஷயம் குறித்து விசாரிக்க உங்கள் மாநிலத்திற்கு வந்துள்ளேன். ஆனால் உங்களை சந்திக்க எனக்கு நேரம் கொடுக்கவில்லை. இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. எனினும் நான் ஆளுநரை சந்தித்து விவாதித்துவிட்டேன். தமிழகத்தில் பற்றி எரியும் இந்த விஷயத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.












Click it and Unblock the Notifications