லோக்சபா தேர்தல் 2024... சிபிஐ, சிபிஎம், மதிமுக.. யாருக்கு எந்த தொகுதி? திமுக பேச அழைப்பு
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் பரபரப்பான சூழ்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. வரும் பிப்ரவரி 3,4ஆம் தேதிகளில் கூட்டணி கட்சியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதில் முடிவு எட்டப்படாததால் பிப்ரவரி 9ஆம் தேதிக்கு பிறகு 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோருடன் காங்கிரஸின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, காங்கிரஸ் 15 தொகுதிகள் கேட்டதாகவும், புதுச்சேரி உட்பட7 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று திமுக தரப்பில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, இரு தரப்பினரும், தங்கள் தலைவர்களுடன் கலந்து பேசி, அதன் விவரங்களை அடுத்த கூட்டத்தில் தெரிவிப்பது என்று முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதனிடையே கூட்டணி கட்சியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குழுவினருடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொகுதிப்பங்கீடு பற்றி பேசுகிறது. அப்போது யாருக்கு எந்த தொகுதி என இறுதி செய்யப்படும்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ், நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட சுப்பராயன் வெற்றி பெற்று லோக்சபாவிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அதே தொகுதிகள் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்குமா?அல்லது வேறு தொகுதி கிடைக்குமா என்று பிப்ரவரி 3ஆம் தேதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு தெரியவரும்.
அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் மதுரை தொகுதியிலும் பி.ஆர். நடராஜன், கோவை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று லோக்சபாவிற்கு சென்றனர். இம்முறை மதுரை, கோவை தொகுதிகளை விட்டுத்தர திமுக தயாராக இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது எனவே பிப்ரவரி 4ஆம் தேதி திமுக உடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு எந்தெந்த தொகுதிகள் சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்ற தகவல் தெரியவரும்.
அதே போல மதிமுக உடன் பிப்ரவரி 4ஆம் தேதி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின் போது ஈரோடு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது என்றாலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் மதிமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்று லோக்சபாவிற்கு சென்றார். இந்த முறை மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிட்டாலும் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கடைபிடித்த பார்முலாவை இந்த முறையும் பின்பற்ற தயாராகி வருகிறதாம் திமுக.
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொமதேக, முஸ்லிம் லீக் ஆகியவை இடம் பெற்றிருந்தன. தற்போது இந்திய ஜனநாயகக் கட்சி இந்த கூட்டணியில் இடம் பெறவில்லை.
2019ஆம் ஆண்டு திமுக கூட்டணி போட்டியிட்ட 39 இடங்களில் 38 இடங்களில் வென்றது. திமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொமதேக, மதிமுக ஆகியவை போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களைக் கைப்பற்றியது. தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.பி. ரவீந்தரநாத் வெற்றி பெற்றார்.
இந்த முறை திமுக 21 இடங்களிலும் இதர கட்சிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஒதுக்கிய அதே இடங்களையும் ஒதுக்கி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்துக் கொள்ள திமுக விரும்புகிறதாம். காங்கிரஸ் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் பிப்ரவரி 3ஆம் தேதிக்கு மேல் பேச அழைப்பு விடுத்துள்ளது திமுக. அதே நேரத்தில் அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவும் ஆலோசனையை தொடங்கியுள்ளதால் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழகத்தில் அனலடிக்க ஆரம்பித்து விட்டது.












Click it and Unblock the Notifications