லோக்சபா தேர்தல் 2024: ஸ்பீடு காட்டும் திமுக.. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதா?
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் திமுக அமைப்பு பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில் இந்த முறை பாஜகவை மத்திய வரவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் புதிய கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

இதேபோல், தமிழகத்திலும் முதல்வர் மு.க ஸ்டாலின் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் என்றும், மத்திய மோடி ஆட்சி இதோடு முடிவுக்கு வந்துவிடும் என்று சூளுரைத்து வருகிறார். இப்படி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் திமுக அமைப்பு பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அவருடன் எம்பி நவாஸ் கனியும் சென்றிருந்தார். இந்த சந்திப்பின் போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசப்பட்டதாக தெரிகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியை திமுக ஒதுக்கியது. இதில் நவாஸ்கனி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை இராமநாதபுரம் தொகுதியில் திமுகவே போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இதனால் அதற்கு பதிலாக வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கூட்டணி குறித்து நாங்கள் பேசவில்லை என்றும் , கட்சியின் 75வது ஆண்டு பவளவிழா மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினை அழைப்பதற்காக தான் சந்தித்ததாகவும் நவாஸ் கனி எம்பி கூறினார்.












Click it and Unblock the Notifications