3 தனி தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. கொத்தாக அள்ளுமா?.. விழுப்புரம் பாக்கியராஜ் யார் இவர்
சென்னை: லோக்சபா தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மூன்று தனித்தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாக்கியராஜ் தற்போதய சிட்டிங் எம்.பி விசிகவின் ரவிக்குமாரை வெல்வாரா என்று பார்க்கலாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினம் லோக்சபா தொகுதி வேட்பாளராக வை.செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வை.செல்வாஜ், வயது 62. மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ, எம்.பில் ) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் வரை பெற்ற இவர், கல்லூரியில் படிக்கும் பொழுதே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின், மாணவர் இயக்க தலைவராக பணியாற்றியிருக்கிறார்.

இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக சுர்சுத் சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். புதுமுக வேட்பாளரான இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை சமாளித்து வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிதம்பரம் தனி தொகுதியில் 6வது முறையாக போட்டியிடுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருக்கிறார். சிட்டிங் எம்.பியாக உள்ள திருமாவளவனுக்கு எதிராக அதிமுக வேட்பாளராக களமிறங்குகிறார் சந்திரகாசன்.
விழுப்புரம் தனி தொகுதியில் விசிக வேட்பாளராக சிட்டிங் எம்.பி ரவிக்குமார் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார் பாக்கியராஜ். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் அதிமுக கட்சியில் 2011 முதல் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2014 வரை தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை இயக்குனராக பணியாற்றினார். தற்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ளார். மேலும் இவர் ஸ்டார் ஹோட்டல் ஒப்பந்ததாரராக பணி செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications