திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்.. நெல்லை, கிருஷ்ணகிரி.. இதோ லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகள் என்னென்ன என்ற அறிவிப்பு இன்று வெளியானது. கரூர், கன்னியாகுமரி, திருவள்ளூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு உடன்படிக்கை இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தானது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 லோக்சபா தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் 9 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவை என்னென்ன என்பது குறித்து ஆலோசிக்க இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

9 தொகுதிகள் என்னென்ன?: இதில், காங்கிரஸ் சார்பில், அசோக் கெலாட், அஜோய் குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு உடன்படிக்கை இன்று கையெழுத்தானது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. திருவள்ளூர்,
2. கடலூர்,
3, மயிலாடுதுறை,
4, சிவகங்கை,
5, நெல்லை,
6. கிருஷ்ணகிரி,
7. கரூர்,
8. விருதுநகர்,
9. கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

மதிமுகவிற்கு திருச்சி தொகுதி: கடந்த முறை தேனி, ஆரணி, திருச்சி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்ததது. ஆனால், இந்த முறை அந்த தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை இந்த மூன்று தொகுதிகளுக்கு பதிலாக இம்முறை திருநெல்வேலி, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் திருச்சி தொகுதியை மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது திமுக. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
வேட்பாளர் பட்டியல் எப்போது?: கடந்த முறை நெல்லையில் திமுக போட்டியிட்ட நிலையில், கங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இதுவரை போட்டியிடாத தொகுதியான திருநெல்வேலி தொகுதியை திமுக காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது. இதேபோல் கரூர் தொகுதியை திமுகவினர் விடாப்பிடியாக கேட்டு வந்த நிலையில் அந்த தொகுதியை காங்கிரசுக்கு திமுக விட்டுக்கொடுத்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது . தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால், தற்போதே தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. வேட்புமனு தாக்கல் 20 ஆம் தேதி தொடங்க இருப்பதால் அதற்குள் தொகுதி பங்கீடை முடிக்க வேண்டும் என்பதால் இன்று திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications