காங்கிரஸுக்கு ஒன்லி சிங்கிள் டிஜிட்தான்..கதறினாலும் "கறார்" காட்டும் திமுக; சோனியாவுடன் நாளை பேச்சு?
சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி நாளை சென்னை வருகை தருகின்றனர். இந்த பயணத்தின் போது திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலிடனுடன் லோக்சபா தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை சோனியா மேற்கொள்ளக் கூடும் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
லோக்சபா தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்டவை பிரதான கட்சிகள். "இந்தியா" கூட்டணி கட்சிகள் மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைவாக தொடங்க வேண்டும் என்பது மும்பை கூட்டத்தின் முடிவு.

திமுக மகளிர் உரிமை மாநாடு: இந்நிலையில் சென்னையில் திமுக மகளிர் அணி நடத்தும் மாநாட்டில் சோனியா, பிரியங்கா காந்தி நாளை பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டுக்கு வருகை தரும் போது ஸ்டாலினுடன் லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை சோனியா தொடங்கி வைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் ஆச்சரிய வெற்றி: தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு செல்வாக்கு இருப்பதாக சொல்லிக் கொள்ளப்படுகிறது. ஆனால் களத்தில் காங்கிரஸுக்கு கட்சி சொற்பமான வாக்குகள்தான் இருக்கின்றன. கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை வாரி வாரி கொடுத்து திமுக தோற்றது என்பதுதான் சரித்திரம். கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவிடம் போராடி 10 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றது. இதில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
பேரம் பேசும் காங்கிரஸ் முயற்சி: இந்த முறை 10க்கும் அதிகமான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவது என்பது தமிழ்நாடு காங்கிரஸின் விருப்பம். ஆனால் திமுக இம்முறை 8-க்கும் குறைவான தொகுதிகளைத்தான் காங்கிரஸுக்கு ஒதுக்கக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். காங்கிரஸ் கட்சி இந்த சிங்கிள் டிஜிட்டை ஏற்குமா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்ட நிலையில் இதை காரணம் காட்டி காங்கிரஸ் பேரம் பேசுமா? என்கிற கேள்வியும் உள்ளது.
சிங்கிள் டிஜிட் பார்முலா: இந்த நிலையில் சோனியாவுடன் நாளை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட் சீட்டுதான் என்பதை உறுதி செய்துவிட்டு இதர கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக தலைமை தொடங்கிவிடும் எனவும் கூறப்படுகிறது. என்னதான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் முட்டி மோதினாலும் இம்முறை சிங்கிள் டிஜிட் தொகுதிகள்தான் என்பதில் திமுக உறுதியாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல திமுகவுடனான கூட்டணியைத்தான் காங்கிரஸ் டெல்லி மேலிடமும் விரும்பும்; ஆகையால் திமுகவின் சிங்கிள் டிஜிட் பார்முலா ஒர்க் அவுட் ஆகக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications