தேசிய கட்சியுடன் கூட்டணி ஆலோசனை நடக்கிறது.. விரைவில் அறிவிப்போம்.. ஓ.பி.எஸ் பேட்டி!
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 லோக்சபா தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களின் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பலர் அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்து இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
தேசிய கட்சி
ஓ.பன்னீர்செல்வம் தனது பேட்டியில், கூட்டணி தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இப்போதுதான் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். மிகப்பெரிய கூட்டணியை நாங்கள் அமைப்போம்.
என்ன ஆலோசனை
எங்கே போட்டியிடுவது, எத்தனை இடங்கள் கொடுப்பது என்பதை ஆலோசனை செய்கிறோம். இது குறித்து முக்கிய தலைவர்களுடன் பேசி வருகிறோம். விரைவில் நாங்கள் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிடுவோம்.
விரைவில் அறிவிப்பு
கடந்த முறை 40 தொகுதியில் நாங்கள் போட்டியிட்டோம். கூட்டணி முடிவிற்கு பின் இந்த முறை எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்று கூறுவோம். ஆனால் கண்டிப்பாக இந்த முறை கூட்டணி அமைத்துத்தான் தேர்தலில் போட்டியிடுவோம், என்று ஓ.பன்னீர்செல்வம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
விருப்பம்
மேலும், தகுதி, திறமையிருந்தால் யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் ஏற்று கொண்டால் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும். என்னுடைய மகன் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றதை டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். என்னுடைய மகன் அதிமுகவில் பல நாட்களாக உறுப்பினராக உள்ளார்.
எல்லோருக்கும் உரிமை
அதிமுக உறுப்பினர் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது. அதனால்தான் நாங்கள் மனுக்களை எல்லோரிடம் இருந்தும் பெற்று வருகிறோம். பெரியவர், சிறியவர் என்பதில் அதிமுகவில் எந்த வித்தியாசமும் இல்லை. அதனால் எனது மகனுக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை இருக்கிறது., என்றும் ஓ.பன்னீர்செல்வம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.