வந்தது நம்பிக்கை! கொரோனா தடுப்பூசியால் ஒன்னும் ஆகாது- கிராமங்களில் நீண்ட வரிசைகளில் குவிந்த மக்கள்
சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவதால் நன்மைதான்; பாதுகாப்பானதுதான் என்பதை உணர்ந்து கொண்டதால் தமிழகத்தில் கிராமங்களில் காலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர் பொதுமக்கள்.
Recommended Video
கொரோனா முதல் அலையின் முடிவில்தான் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. நாட்டில் கடந்த 6 மாதங்களாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பூசி திட்டம்
தற்போது வரை மொத்தம் 27.23 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோர், 3 வது கட்டமாக 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர் என தடுப்பூசி போடப்பட்டது.

அர்த்தமற்ற வதந்திகள்
கடந்த சில மாதங்களாக கொரோனா 2-வது அலை உக்கிரமாக இருந்த நிலையிலும் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு கிராமங்களில் குறைவாகவே இருந்தன. ஒரு கிராமத்தில் அதிகபட்சம் 10 பேர் அல்லது 15 பேர்தான் தடுப்பூசி போட்டிருந்தனர். ஏனெனில் தடுப்பூசிகள் தொடர்பான சில தேவையற்ற வதந்திகள் மக்களை அச்சத்துக்குள்ளாக்கி இருந்தன.

கிராமங்களில் நம்பிக்கை
ஆனால் கொரோனா தடுப்பூசிகளின் 2 டோஸும் கண்டிப்பாக போட வேண்டும்; இந்த தடுப்பூசிகள்தான் கொரோனாவால் உயிரிழப்பதில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்கிற இடைவிடாத விழிப்புணர்வு பிரசாரங்கள் இப்போதுதான் கிராமங்களை சென்றடைந்துள்ளன. கொரோனா தடுப்பூசிகள் போடுவதால் உடலுக்கு எதுவும் நேராது; அதிகபட்சம் சோர்வு அல்லது காய்ச்சல் மட்டுமே ஏற்படும் என்கிற நம்பிக்கை கிராம மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் வரிசைகள்
இதனால் கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு காலை முதலே நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்; சில இடங்களில் கற்களை வைத்து வட்டமிட்டு தங்களது பெயரை எழுதிவிட்டு செல்கிற நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. கொரோனா தடுப்பூசியை ஏன் போட முன்வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ஒருவித அச்சம் இருந்து வந்தது. இப்போது கொரோனா தடுப்பூசி தொடர்பான தயக்கம், அச்சம் எதுவும் இல்லை; அதனால் போட வந்தோம் என்கின்றனர் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications