'₹' விவகாரம்: ரூபாய் மதிப்பு என்னாச்சுன்னு பாருங்க..நிர்மலா சீதாராமனுக்கு பதில்! கர்நாடகாவில் ஆதரவு!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு '₹' என்ற குறியீடு இந்தி- சமஸ்கிருத மொழிகளுக்கு எழுத்து முறையான தேவநாகரியில் இருப்பதால் அதனைத் தவிர்த்து தமிழில் ரூபாய் என்பதன் சுருக்கமாக ரூ என பட்ஜெட்டில் பயன்படுத்துவதை பிரிவினைவாத ரேஞ்சுக்கு விமர்சித்திருந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள், ரூபாய் குறியீடு பற்றி கவலைப்படாமல் ரூபாய் மதிப்பு நிலைமை என்ன என்பதை பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அக்கறைபட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
'₹' என்ற ரூபாய் மதிப்புக்கான குறியீடு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு, இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் '₹' என்ற குறியீட்டுக்குப் பதில் தமிழ் எழுத்தான ரூ என்பதை பயன்படுத்துகிறது. '₹' என்ற குறியீடு தேவநாகரி எழுத்து முறையாகும். இந்த தேவநாகரிதான் இந்தி- சமஸ்கிருதத்துக்கான எழுத்து முறை. இதனால் இதனைத் தவிர்த்துவிட்டு தமிழில் ரூபாய் என்று எழுதுவதால் ரூ என்ற குறியீட்டையே தமிழ்நாட்டின் திமுக அரசு பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டின் திட்ட குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனும் தேவநாகரி எழுத்து என்பதால் இதனை பயன்படுத்தவில்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆனால் பாஜகவினரோ இதனை கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்தி மொழி ஊடகங்கள், ஆங்கில மொழி ஊடகங்கள் இந்த விவகாரத்தை இந்தியாவின் தேசியப் பிரச்சனையாக விவாதிக்கின்றன; தேசிய சின்னங்களில் ஒன்றுதான் '₹' ; இதனை போய் திமுக அரசு மாற்றிவிட்டதே என புலம்புகின்றனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, '₹' என்ற குறியீட்டை மாற்றியதே பிரிவினைவாதம் என்கிற வகையில் மிரட்டல் விடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த விமர்சனப் பதிவுக்கு நெட்டிசன்கள் ஏராளமானோர் பதில் கொடுக்கின்றனர். அதில் பொதுவாக, மேடம் ரூபாய் குறியீடு பற்றி கவலைபடாமல் ரூபாய் மதிப்பு நிலைமை என்ன என்பதை பற்றி அக்கறை செலுத்துங்கள் என கிண்டல் செய்துள்ளனர்.
கர்நாடகாவில் ஆதரவு
இதனிடையே தமிழ்நாட்டைப் போல கர்நாடகாவிலும் '₹' என்ற குறியீட்டுக்குப் பதில் கன்னட மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. கர்நாடகா அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே கூறுகையில், மாநில அரசுகளை கையாளும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மத்திய அரசு தமது கடமையை சரிவர செய்யவில்லை. அதனால்தான் இத்தகைய நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திமுக அரசின் இத்தகைய முடிவு, மத்திய அரசுக்கான எச்சரிக்கை என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications