ரூ 47 கோடியை ஏப்பம் விட்ட பிரணவ் ஜுவல்லர்ஸ்! உரிமையாளர், மனைவிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
சென்னை: பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்கள் மதன், மனைவி கார்த்திகாவுக்கு லுக் அவுட் நோட்டீஸை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பிறப்பித்துள்ளனர்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்தது பிரணவ் ஜுவல்லரி. இது மிக குறுகிய காலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம் , கோவை, ஈரோடு, நாகர்கோவில், புதுவை உள்ளிட்ட இடங்களில் கிளைகளை நிறுவியது.

இந்த ஜுவல்லரியில் 0% செய்கூலி, சேதாரம் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை தந்தனர். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் வட்டி வழங்கப்படும், அல்லது 10 மாதங்களுக்குப் பிறகு செய்கூலி, சேதாரம் இன்றி 106 கிராம் தங்க நகை பெற்றுக் கொள்ளலாம் என விளம்பரம் செய்திருந்தனர்.
அது போல் 11 மாதம் சீட்டு கட்டினால் 12 ஆவது மாத தவணையை செலுத்த தேவையில்லை என்றும் விளம்பரப்படுத்தியிருந்தது. பழைய நகைகளை அடகு கடையில் வைத்து ஏன் வட்டி கட்டுகிறீர்கள், பழைய நகைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள், ஒரு ஆண்டு கழித்து செய்கூலி, சேதாரம் இல்லாமல் பழைய நகையின் எடைக்கு நிகரான புதிய நகைகளை அள்ளுங்கள் என்றெல்லாம் வசனங்களை பேசியிருந்தனர்.
இதை நம்பி பிரணவ் ஜுவல்லரியின் பல்வேறு கிளைகளில் மக்கள் பணத்தை கட்டினர். பழைய நகைகளையும் கொடுத்து ஓராண்டுக்கு பிறகு புது நகைகளை வாங்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் பிரணவ் ஜுவல்லரியோ தங்கள் கிளைகளை இழுத்து மூடிவிட்டது. அதில் தலைமையகமான திருச்சியையும் மூடிவிட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக் கடை உரிமையாளர் மதன் செல்வராஜ் மீது காவல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அது போல் பழைய நகைகளுக்கு பதிலாக புதிய நகைகளை தருவதாக சொன்னதை அடுத்து பழைய நகைகளை கொடுத்தவர்கள் கேட்ட போது அதையும் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர், ஊழியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் உரிமையாளரை தேடி வந்த நிலையில் பிரணவ் ஜுவல்லர்ஸ் கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய மேலாளரை கைது செய்தனர். இந்த நிலையில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்கள் மதன் செல்வராஜ், அவருடைய மனைவி கார்த்திகாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரணவ் ஜுவல்லரி மோசடி விவகாரத்தில் 100 சவரன் நகை, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications