30ஆம் தேதி வரை கெடு! ஒரு முடிவு தெரிஞ்சாகணும்! லாரிகள் ஸ்டிரைக்! குண்டை தூக்கி போட்ட உரிமையாளர்கள்!
சென்னை: தங்களது கோரிக்கைகளை ஜூன் 30ஆம் தேதிக்குள் ஏற்காவிட்டால் தமிழ்நாட்டில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் லாரிகள் ஓடாவிட்டால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் முற்றிலும் முடங்குவதோடு விலைவாசியும் கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்க வேண்டும்.

லாரிகள் மீது போக்குவரத்து காவலர்கள் ஆன்லைனில் வழக்கு போடுவதை தவிர்க்க வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும், 21 இடங்களில் உள்ள பார்டர் சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட இன்னும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னையில் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்த அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, அதில் பங்கேற்கவும் செய்தார். இதனிடையே உண்ணாவிரத போராட்டம் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி தனராஜ், தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானது அவற்றை அரசு ஏற்காவிட்டால் ஜூன் 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்ற முக்கியத் தகவலை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் ஒரு லாரி கூட ஓடாது என்றும் பிறமாநில லாரிகளும் தமிழ்நாட்டிற்குள் ஓடாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதோடு விலை வாசியும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதனால் இந்த விவகாரத்தை அரசும், உரிய அதிகாரிகளும் உரிய முறையில் கையாண்டு லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications