சென்னையில் சோக சம்பவம்.. லாரி டயர் பறந்து வந்து விழுந்ததில் இளம்பெண் பலி
சென்னை: செங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரியின் டயர் பறந்து வந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்குன்றம் ஜிஎன்டி சாலை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் கவிதா (23) என்பவரும் அவருடைய தங்கை சாருலதா (17) ஆகிய இருவரும் செங்குன்றத்தில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு, பாடியில் உள்ள தங்களது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
காவாங்கரை அருகிலுள்ள தனியார் கல்லூரி அருகே இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது, சாலையின் எதிர் புறம் வந்த லாரியின் மேல் இருந்து, டயர் பறந்து வந்து, இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததாக தெரிகிறது.

ரத்த வெள்ளம்
இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கவிதா நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரின் பின்பக்க மண்டை உடைந்து, ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தார். அவரின், பின்னால் அமர்ந்திருந்த தங்கை சாருலதாவிற்கு கன்னம் மற்றும் கைகளில் சிராய்ப்புகள் ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார் .

பரிதாப பலி
இதை கண்ட, அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். ஆனால், ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கவிதாவின் உயிர் பிரிந்தது. பாடியநல்லூர் மருத்துவமனையில், தங்கை சாருலதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள, மாதவரம் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

கல்லூரி மாணவி
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கவிதா பாடி வடக்கு மாதா தெருவைச் சேர்ந்த பிரபு என்பவரின் மகள் என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. காயமடைந்த அவருடைய தங்கை சாருலதா அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications