2026ல் முதல்வர் ரேஸில் விஜய் முன்னணி? கடும் போட்டியில் திமுக- அதிமுக! லயோலா முன்னாள் மாணவர்கள் சர்வே
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யாருடைய ஆட்சி அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து லயோலா முன்னாள் மாணவர்களின் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு கருத்துக் கணிப்பை எடுத்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த முடிவுகளை பார்க்கும் போது இதில் பல்வேறு அம்சங்கள் கண்களுக்கு புலப்படுகின்றன. தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெறுகிறது. இதில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அன்றாடம் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பலாத்கார சம்பவங்கள், காவல் நிலையம் மீதான தாக்குதல், ஜாதிய மோதல்கள் என சகஜமாகிவிட்டது.

எனவே திமுக ஆட்சியை 2026 ஆம் ஆண்டு விரட்டுவோம் என எதிர்க்கட்சிகள் சபதம் ஏற்றுள்ளன. அது போல் தங்கள் ஆட்சியில் உள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்டுள்ள திமுக, அதன் கூட்டணி கட்சிகளும் மீண்டும் திமுக ஆட்சியே தொடரும் என்கிறார்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தை
தற்போது கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. வழக்கம் போல் புரட்சி பாரதம் உள்ளது. ஏற்கெனவே லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிக, ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படாத அதிருப்தியில் இருப்பதால், தனது நிலைப்பாட்டை பிறகு சொல்வதாக அறிவித்துள்ளது.
எந்த கூட்டணியில் பாமக
பாமக தற்போது எந்த கூட்டணிக்கு செல்வது என யோசித்து வருகிறது. பாஜகவில் அமமுக, ஏசி சண்முகம் கட்சி, ஜி.கே.வாசனின் தமாகா, ஓபிஎஸ்ஸின் அதிமுக மீட்பு குழு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் பாமக, பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என அன்புமணி விரும்புகிறார். ஆனால் ராமதாஸோ பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என மறுக்கிறார்.
சீமான் தனித்து போட்டி
சீமான் வழக்கம் போல் தனித்து போட்டி. டார்ச்சை தூக்கி அடித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி சென்று ஒரு லோக்சபா சீட்டையும் பெற்று எம்பியாகிவிட்டார். எது எப்படியோ அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் கூட்டணி கணக்குகள் ஓரளவுக்கு இறுதியாகிவிடும் என தெரிகிறது.
லயோலா முன்னாள் மாணவர்கள்
இந்த நிலையில் லயோலா முன்னாள் மாணவர்கள் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் எனும் அமைப்பை தொடங்கியுள்ளனர். இவர்கள் தற்போது அடுத்த ஆண்டு தேர்தலுக்கான கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டு யார் முதல்வர்
அதில் பொதுமக்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான கேள்வி, வரும் 2026 ஆம் ஆண்டு யார் முதல்வராக இருக்க வாய்ப்புள்ளது என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 77.83 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
உதயநிதிக்குமா இடம்?
அது போல் எடப்பாடி பழனிசாமிக்கு 73.30 சதவீதமும், உதயநிதி ஸ்டாலினுக்கு 67.99 சதவீதமும் அண்ணாமலைக்கு 64.58 சதவீதமும், விஜய்க்கு 60.58 சதவீதமும் சீமானுக்கு 30.80 சதவீதமும் அன்புமணி ராமதாஸுக்கு 19.97 சதவீதமும் ஓபிஎஸ்ஸுக்கு 17.39 சதவீதமும் டிடிவி தினகரனுக்கு 16.29 சதவீதமும் திருமாவளவனுக்கு 14.71 சதவீதமும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
கருத்துக் கணிப்பு
பொதுவாக எந்த கருத்துக் கணிப்பாக இருந்தாலும் அதில் குறிப்பிடும் சதவீதங்களை கூட்டினால் 100 வர வேண்டும். ஆனால் இது 100 சதவீதத்தை தாண்டி செல்கிறது. இது ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
எடப்பாடி பழனிசாமி
இந்த கருத்து கணிப்பு முடிவுகளை பார்த்தால் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் ஆகியோர்தான் முதல்வர் வேட்பாளர்களாக கருத முடியும். இதனால் ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.
உதயநிதி முதல்வர் வேட்பாளரா
ஆனால் உதயநிதி முதல்வர் வேட்பாளர் என்பது தந்தை ஸ்டாலினின் செல்வாக்கால் கிடைத்தது. மேலும் அவர் தற்போதைக்கு முதல்வர் வேட்பாளரும் அல்ல. அது போல் அன்புமணி ராமதாஸ், மாற்றம் முன்னேற்றம் என சொல்லி வந்தாலும் ஒரு கட்டத்தில் கூட்டணியில் குறைந்தபட்ச தொகுதிகளிலேயே பாமக போட்டியிடுகிறது. கூட்டணியில் சொற்ப சீட்டுகளை வைத்து கொண்டு முதல்வர் கனவு காண்பது பலனற்றது.
விடியல் பயணம்
ஓபிஎஸ், டிடிவி தினகரனும் பாஜக கூட்டணியில் உள்ளார்கள். திருமாவளவனும் திமுக கூட்டணியில் உள்ளார். அது போல் எந்தெந்த அரசு நலத்திட்டங்கள் மக்களை கவர்ந்துள்ள என்பது குறித்தும் கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்ட நிலையில் அதில் காலை உணவு திட்டமும், விடியல் பயணமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கருத்துக் கணிப்பு
பொதுவாக கருத்துக் கணிப்பு என எடுத்தால் தலைவர்களை வைத்து எடுக்கும் போது ஸ்டாலினும் எடப்பாடியும் முதல் இரு இடங்களை பெறுவார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள தலைவர்களில் விஜய் ,சீமான் ஆகிய இருவரில் விஜய்க்கு கிடைத்துள்ள ஆதரவில் பாதிதான் சீமானுக்கு கிடைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதலே கட்சித் தொடங்கிய சீமான், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதத்தை அதிகரித்து தற்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளார்.
சுதாரிக்க வேண்டுமா சீமான்?
ஆனால் விஜய் இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. அவருக்கு எப்படி 60 சதவீதம் கிடைத்தது என தெரியவில்லை. ஒரு வேளை விஜய்யின் புகழுக்கு கிடைத்த வாக்குகளாக கூட இருக்கலாம். ஆனால் அவர் களத்தில் நின்று பெரிய கட்சிகளுடன் போட்டியிட்டு எத்தனை இடங்களில் வெல்கிறார், எத்தனை சதவீதம் வாக்குகளை அவரது கட்சி பெறுகிறது என்பதை பார்த்தால்தான் விஜய்யின் செல்வாக்கு மக்களிடம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரியும். எனவே இந்த கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு பலிக்கிறது என்பதை தேர்தல் முடிவுகளின் போது தெரியவரும்.












Click it and Unblock the Notifications