விஜய்யால் சீமானுக்கு பாதிப்பு இல்லை.. பிடியை தவறவிட்ட விசிக.. லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு!
சென்னை: தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்கு அதிகளவில் பாதிப்பு இல்லை என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக சீமான் தமிழக வாக்காளர்கள் மத்தியில் தனது பிடியை இறுக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான் மற்றும் விஜய் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலையொட்டி லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் தரப்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு பெரும்பாலான முறைகள் சரியாகவே இருந்திருக்கிறது. இதனால் லயோலா கருத்துக்கணிப்பு குறித்து அரசியல் கட்சிகளும் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். இந்த நிலையில் லயோலா கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு 234 தொகுதிகளிலும் 81,375 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நகரங்களில் 54.8 சதவிகிதம் பேரிடமும், எஞ்சிய இடங்களில் 45.2 சதவிகிதம் பேரிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 81.71 சதவிகிதம் பேர் இந்துக்கள், 10.55 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள், 7.75 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் விஜய் புதிதாக களமிறங்குவதால் எந்தக் கட்சிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வியும் கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ளது. அதன்படி தவெகவின் வருகையால் திமுகவுக்கு அதிக பாதிப்பு இருக்கும் என்றும், தொடர்ந்து விசிகவுக்கு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் அதிமுகவும், 4வது இடத்தில் பாமகவும், 5வது இடத்தில் நாதகவும் இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கிய போது, சீமானின் வாக்கு வங்கி கணிசமாக குறையும் என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் பேசினர். லோக்சபா தேர்தலில் சீமான் பெற்ற 8 சதவிகித வாக்குகளே அவரின் உச்சம் என்றும் கூறினர். இனி நாதகவின் வாக்குகளை விஜய் கைப்பற்றுவார் என்றும் கூறி வந்தனர். ஆனால் லயோலா கருத்துக்கணிப்பில் சீமானுக்கு சொற்பமான பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக சீமான் பிடியை இறுக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியில் சீமானுக்கு செல்வாக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே சீமான் தவெக மற்றும் விஜய்யை கடுமையாக சாடி வந்த நிலையில், இந்த கருத்துக்கணிப்பு நாதகவினருக்கு நிம்மதியை கொடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications