+2 பொதுத் தேர்வு- உளவியல் போரிலிருந்து மாணவ சமுதாயத்தை விடுவித்த தமிழக அரசுக்கு பாராட்டு: வைரமுத்து
சென்னை: பிளஸ் டூ தேர்வு (+2 தேர்வு, பன்னிரெண்டாம் வகுப்பு, பிளஸ் 2 ) எனும் உளவியல் போரில் இருந்து மாணவர் சமுதாயத்தை விடுவித்த தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வுகளை கொரோனா பாதிப்பை காரணம் காட்டி ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனடிப்படையில் மாநிலங்களிலும் பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தமிழகத்திலும் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அத்துடன் நீட் தேர்வின் பாதிப்பு, மாற்று மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு ஒன்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிளஸ் டூ தேர்வுகள் ரத்து தொடர்பாக கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
+2 பொதுத் தேர்வு என்ற
உளவியல் போரிலிருந்து
மாணவ சமுதாயத்தை விடுவித்த
தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.
உயர்கல்வியா உயிரா
என்ற வினாவை முன்வைத்து
உயிரே என்று முடிவெடுத்ததில்
மாணவர்களின் பதற்றம் தணிந்தது.
+2 தேர்வு முடிவில்
முதலமைச்சருக்கு
நூற்றுக்கு நூறு
இவ்வாறு வைரமுத்து பாராட்டியுள்ளார்.