"உடனே லிஸ்ட் ரெடி பண்ணுங்க".. சைலண்டாக ஸ்டாலின் போட்ட உத்தரவு.. உற்சாகத்தில் திமுக.. அடங்கும் அலைகள்
சென்னை: திமுகவில் 173 வேட்பாளர்கள் இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கியமான லிஸ்ட் ஒன்றை தயார் செய்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
திமுக சார்பாக சட்டசபை தேர்தலில் 173 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு தற்போது தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. திமுக சார்பாக இதற்காக தீவிரமாக பிரச்சாரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது .
இப்படி இருக்க திமுகவில் சில மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் தங்களுக்கு சீட் கிடைக்காத வருத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது. சில நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியானது.
அதிருப்தி
எங்களுக்கு சீட் கொடுக்காமல், வேறு சிலருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வேட்பாளர் தேர்வில் குளறுபடி நடந்துவிட்டது என்று சில நிர்வாகிகள் புகார்களை அடுக்கினார்கள். இந்த நிலையில் இவர்களை சமாதானப்படுத்தும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கியமான லிஸ்ட் ஒன்றை தயார் செய்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
என்ன லிஸ்ட்
அந்த லிஸ்ட்படி திமுகவில் வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை பட்டியலிடப் போகிறார்கள். இவர்களுக்கு ஆட்சிக்கு வந்ததும் முக்கிய பொறுப்புகளை ஆட்சியில் கொடுக்க போகிறார்கள். எம்எல்ஏக்களை தவிர மற்றவர்களை மாவட்ட செயலாளர்களாக நியமிக்கும் திட்டம் உள்ளதாம். அதோடு மீதம் இருக்கும் சிலருக்கு கட்சியில் மேல்மட்ட பொறுப்புகளையும் வழங்க முடிவு செய்துள்ளாராம்.
எத்தனை
கிட்டத்தட்ட 20-25 பேருக்கு இப்படி சிறப்பு பதவிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இவர்கள் போக வாய்ப்பு கிடைக்காத சில வாரிசுகளுக்கும் கட்சியில் உயர் பதவிகளை அளிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். தேர்தலுக்கு பின் ஆனால் முடிவு வருவதற்கு முன்பாக, இந்த அறிவிப்புகளை வெளியிடும் முடிவில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார் என்கிறார்கள்.
அலைகள்
இந்த விஷயம் ஏற்கனவே திமுக நிர்வாகிகளுக்கும் சென்றுவிட்டதாம்.. தேர்தல் நேரத்தில் பணிகள் நன்றாக நடக்க வேண்டும் , அதிருப்தி உறுப்பினர்கள் கட்சி மாற கூடாது போன்ற பல காரணங்களை மனதில் வைத்து ஸ்டாலின் இந்த முடிவை செய்துள்ளார். எல்லோரையும் அனுசரித்து போவோம், தேவையில்லாத எதிர்ப்புகள் வேண்டாம் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதால்தான் இந்த உத்தரவை சைலண்டாக போட்டதாக கூறப்படுகிறது.