ஷாக்கிங்.. தமிழக துப்புரவு பணியாளர் வேலைக்கு முந்தியடித்து விண்ணப்பித்த எம்.டெக், எம்பிஏ பட்டதாரிகள்
சென்னை: வேலையில்லா திண்டாட்டம் தமிழகத்தில் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதற்கு, இந்த சம்பவம் ஒரு உதாரணம் ஆகும். தேசிய ஊடகங்கள் கூட தமிழகத்தில் நடந்துள்ள இந்த ஒரு சம்பவத்தை செய்தியாக்கி விவாதித்து வருகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒருபக்கம், உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளை அடுத்தடுத்து, தமிழக அரசு நடத்தி வந்தாலும், வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு அது தீர்வை கொடுக்கவில்லை என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம்.
தமிழக சட்டசபை செயலகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி, சில வேலைவாய்ப்பு காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
குறைந்தபட்ச தகுதி இதுதான்
மொத்தம் 14 துப்புரவு பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த பணியிடங்களுக்கு, நல்ல உடல் தகுதி கொண்ட, குறைந்தபட்சமாக, தமிழ் எழுத, படிக்க தெரிந்த, 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என தகுதி நிர்ணயிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு இதுவரை 4,607 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
எம்.டெக், இன்ஜினியர்கள்
இந்த விண்ணப்பங்களை படித்து பார்த்த அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களில் கணிசமானோர் இன்ஜினியர்கள், எம்.டெக், பி.டெக், எம்.பி.ஏ போன்ற முதுகலை பட்டதாரிகள். அதிலும், எதையெல்லாம் உயர் படிப்பு என இந்த சமூகம் நம்புகிறதோ அந்த படிப்பை பயின்றவர்கள்.
விண்ணப்பங்கள் பரிசீலனை
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தகுதியின்மை காரணமாக 677 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பிற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த 14 பணியிடங்களுக்கும், பணியாளர்கள் நியமிக்கப்படும்போது, இக்கல்வி தகுதி உள்ளோர் நியமிக்கப்படுவார்களா, அல்லது, நிராகரிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு எப்படி
தேசிய மாதிரி சர்வே அலுவலகம் வெளியிட்ட 2017-18ம் ஆண்டுக்கான வேலையில்லா திண்டாட்ட புள்ளி விவரக் கணக்கெடுப்புப்படி, நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், 6.1 சதவீதமாக இருப்பதாகவும், இது 45 ஆண்டுகாலத்தில் இல்லாத உயர்வு என்றும் கூறப்பட்டிருந்தது. இது தவறான புள்ளி விவரம் என மத்திய அரசு வாதிட்டு வருகிறது. ஆனால், வேலையில்லா திண்டாட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், கண்முன்னால், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.