மருத்துவர்களுக்கு உணவு, தங்கும் விடுதிக்கான வாடகையில் முறைகேடு.. அடுத்த குண்டை போட்ட மா.சு
சென்னை: மருத்துவர்களுக்கு உணவு, தங்கும் விடுதிக்கான வாடகையில் முறைகேடு நடந்துள்ளது என்றும் அதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அருகே பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் 10 ஆண்டுகளாக சுகாதார நிலையங்களைச் சீரமைக்கவில்லை.
அதனால்தான் நாங்கள் சீரமைக்க முடிவு செய்துள்ளோம். ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிக்கு பிரசவம் முடிந்து தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை.

உருமாறும் வைரஸ்
வைரஸ்கள் உருமாறி கொண்டே இருப்பதால் பாதிப்புத் தன்மை இன்னும் புரியாமல் உள்ளது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் மருந்து வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் இந்த நோய் பாதித்தோர் ஒரு கோடி பேருக்கு மேல் உள்ளனர்.

மருத்துவ திட்டம்
அவர்களை கண்டறிந்து வீடு தேடி வரும் மருத்துவ திட்டத்தையும் முதல்வர் தொடங்கியுள்ளார். இதன் மூலம் வீடு வீடாக கணக்கெடுக்கப்பட்டு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மாத்திரைகள் வழங்கப்படும்.

இறப்பு பாதி
மேலும் சிறுநீரகம் பாதித்தோருக்கும் மொபைல் வாகனம் மூலம் டயாலிசிஸ் சிகிச்சை , முடக்குவாதம் பாதித்தோருக்கு பிசியோதெரபி உள்ளிட்டவை வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 5.5 லட்சம் இறப்பு பாதியாக குறையும்.

முறைகேடு
மருத்துவர்களுக்கு உணவு, தங்கும் விடுதிக்கான வாடகையில் முறைகேடு நடந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தினமும் 20 லட்சம் வரை மிச்சப்படுத்தி வருகிறோம் என்றார். அண்மையில் மின்சாரத் துறையில் முறைகேடு நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications