கிளப் டான்ஸ் ஆடறாங்களே.. வெறுத்து போயிட்டேன்.. நான் போறேன்.. "செல்லம்" கொடுத்த ஷாக்!
பொதுவாழ்வில் இருந்து விலக போவதாக செல்லபாண்டியன் அறிவித்துள்ளார்
சென்னை: டாஸ்மாக் பாரில் கிளப் டான்ஸ் ஆடறாங்களே, அதை தட்டிக் கேட்க யாருமே இல்லையே.. மதுவிலக்கு மதுவிலக்கு என்று 2 கட்சிகளும் மாறி மாறி கூப்பாடு போட்டு, கடைசியில டாஸ்மாக் நேரத்தை அதிகமாக்கினதுதான் நடந்திருக்கு.. அதான் ரொம்ப வெறுத்து போயிட்டேன்" என்று மதுவிழிப்புணர்வு சங்க தலைவர் செல்லபாண்டியன் விரக்தியுடன் கூறுகிறார்.
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லபாண்டியன் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. அதன்படி, பொதுவாழ்வில் இருந்து விலக போவதாக கூறியிருந்தார்.. ஆனால் இதற்கு என்ன காரணம் என்று சொல்லவில்லை.

எனவே ஒன் இந்தியா தமிழ் சார்பாக செல்லபாண்டியனிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் திடீரென கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.. பின்னர் தன்னைதானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு நம்மிடம் சொன்னதாவது:
"இந்த சங்கத்துக்கு பேர் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்ன்னு இருக்கு.. ஆனால், யாருமே அந்த விழிப்புணர்வு என்ற வார்த்தையை பயன்படுத்துவதே இல்லை.. குடிகார சங்கம் என்று முத்திரை குத்த ஆரம்பிச்சிட்டாங்க.. ஒரு டிவி ஷோவில் நான் பங்கேற்று பேசியதில் இருந்தே எனக்கு இப்படிப்பட்ட பெயர்தான் கிடைச்சிட்டு வருது.
மதுவிலக்கு என்பதுதான் இந்த சங்கத்தின் நோக்கம்.. ஒவ்வொருத்தர் காலிலும் விழுந்து குடிக்காதீங்க என்று சொல்லியவன்தான் நான்.. சசிபெருமாள் ஐயா மாதிரியேதான் நானும் அப்படி குடிகாரர்களிடம் மன்றாடி கேட்டு கொண்டேன்.. தனிப்பட்ட முறையில் சொல்வது சரியில்லை என்பதால்தான், ஒரு சங்கத்தை ஆரம்பித்து அதன்மூலம் என் கருத்தை சொல்லிட்டு வர்றேன். முள்ளை முள்ளால் எடுக்கணும் என்பதால்தான் இந்த சங்கம் ஆரம்பித்தேன்.
ஆனா, இன்னைக்கு என்ன நடக்குது.. திராவிட கட்சிகள் மதுவிலக்குன்னு சொல்லிட்டே இருக்காங்களே, அதை செஞ்சாங்களா? மதுக்கடைகளை திறந்துவிட்டதுதான் மிச்சம்.. படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவோம்னு தேர்தல்அறிக்கையில் ஒவ்வொருமுறையும் வாக்குறுதி தர்றாங்களே? இதுவரைக்கும் நிறைவேற்றினார்களா?
டாஸ்மாக் நேரத்தை அதிகப்படுத்தி இருக்காங்க.. எல்லா வாக்குறுதியும் காற்றில் பறந்தாச்ச.
பார்கள் எல்லாம் இப்போ ஓபனில் இருக்கு.. ஆனால் ஏலம் விடவில்லை.. பார் மூடிய மாதிரியே ஒரு மாயை.. பார்களில் கிளப் டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க.. யார் இதையெல்லாம் தடுத்து நிறுத்தறது? இந்த சங்கம் ஆரம்பித்து இத்தனை வருடங்களில் குடியால் உயிரிழந்து ஆதரவற்று தவிக்கும் குடும்பங்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் ஒரு நல்லது செய்யணும்தான் போராடினேன்.. பணம் தந்து யாருக்கும் உதவ முடியல.. ஆனால், குடியால் சிகிச்சை பெற்று வரும் மறுவாழ்வு மையங்களுக்கு இலவசமான சிகிச்சை தர ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்.
கடைசியில எனக்கு கிடைச்சது அவமானம்தான்.. எனக்கு 2 பொண்ணுங்க.. ரெண்டு பேருமே நல்லா படிச்சு காலேஜில் கோல்ட் மெடல் வாங்கினவங்க.. மூத்த பொண்ணுக்கு 3 நாளைக்குமுன்னாடி கல்யாணம் பண்ணேன்.. அப்போ என் படம் போட்ட போஸ்டர்களை ஒட்டி, அனைவரையும் கல்யாணத்துக்கு அழைத்திருந்தேன்.. ஆனால், அந்த போஸ்டரை பார்த்துட்டு, "குடிகார சங்க தலைவர் பொண்ணு" என்று கிண்டல் செய்றாங்க.
என் பிள்ளைங்க என்ன செய்தாங்க? நான் நல்லதுதானே இந்த சமுதாயத்துக்கு நினைச்சேன்.. கண்ணீர் விட்டு மகள்கள் அவமானத்தால் அழுறாங்க. நான் ரொம்பவே வெறுத்து போயிட்டேன்.. என்னை ஏன் கிண்டல் செய்றாங்கன்னு தெரியல.. அதான் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிட்டேன்..
ஆனால் மக்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்க ஆசைப்படறேன். இனியாவது விழிச்சுக்குங்க.. தலைவர்களில் தொலைநோக்கு சமூக சிந்தனையுடன் உள்ளவர்களை அடையாளம் காண வேண்டும்.. சமுதாயத்துக்கு உதவி செய்ய யாராவது முன்வந்தால் அவங்களை புறக்கணிக்க கூடாது.. அவ்வளவுதான்" என்றார் விரக்தியுடன்!












Click it and Unblock the Notifications