கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழு! தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை
சென்னை: கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டதில் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மாணவர்கள் மோதலை தடுக்க ஆலோசனைகளை வழங்கும்படி, இரு கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், மாணவர்கள் அமைப்புகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் 231 மாணவர்கள் தொடர்புடைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவல்துறை, உயர் கல்வித் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பச்சையப்பன் கல்லூரியில் படித்துள்ளதாகவும், நோபல் பரிசு வென்ற சர் சி வி ராமன், பிரபல நீதிபதிகள் மாநிலக் கல்லூரியில் படித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி, புகழ்பெற்ற இந்த கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து வேதனை தெரிவித்தார்.
குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என குறிப்பிட்ட நீதிபதி, கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க அறிஞர்கள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற பழமொழிக்கு ஏற்ப, மாணவர்கள் மோதல்களை தடுக்க நீண்டகால தீர்வாக, பள்ளிகளில் அடிக்கடி ஆசிரியர் பெற்றோர் கூட்டங்களை நடத்தி, மாணவர்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காண வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications