சூர்யா படத்திற்காக கொண்டு செல்லப்பட்ட டம்மி ஆயுதம்! போலீஸ் தலையீட்டால் சர்ச்சை.. நீதிமன்றம் உத்தரவு
சென்னை: திரைப்பட படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த காவல்துறையின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக ஏற்கனவே உள்ள நிபந்தனைகள் போதுமானது என்றும் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்கள் காரைக்குடிக்கு கொண்டு செல்லப்பட்ட போது காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மும்பை போலீசார், படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களுக்கு எண்ணிட்டு, உரிமம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளதாகவும், அதேபோல தமிழகத்தில் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவதுடன், தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென உத்தரவிட கோரி, தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் உயர் நீதிமன்றத்தில் 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டம்மி ஆயுதங்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், தங்கள் கிட்டங்கியை ஆய்வு செய்த காவல் துறை அதிகாரிகள், அவற்றுக்கு எண்ணிட்டனர். ஆனால், சங்க உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்க மறுத்து சென்னை காவல் ஆணையர் 2024 டிசம்பர் 20 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆயுத சட்டத்தின் அடிப்படையில் எந்த சான்றிதழும் வழங்க முடியாது எனக்கூறி பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை ரத்து செய்து, சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கக் கோரி தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் சார்பில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தங்கள் சங்கத்தினரும் தொழில் நடவடிக்கைகளில் தலையிட காவல் துறைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், டம்மி ஆயுதங்களுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த காவல்துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், ஏற்கனவே, உயர்நீதிமன்றம் இது தொடர்பாக பிறப்பித்துள்ள நிபந்தனைகள் போதுமானது என்றும் நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications