டெலிவரி பாய்களை கண்காணிக்க கோரி வழக்கு.. டிஜிபி, ஸ்விகி, சொமேட்டோவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: உணவு மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்விகி, ஸொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், டெலிவரி நபர்களை கண்காணிக்க விதிகளை வகுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் புதுக்கோட்டையைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை இருந்தாலும் கூட, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை ஏதும் அவர்களுக்கு இல்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
பெரும்பாலும் டெலிவரி செய்யும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பது இயலாததாக ஆகி விடுகிறது எனவும் சென்னையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஒருவர், உணவு டெலிவரி நிறுவன சீருடையை அணிந்து வந்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், டெலிவரி நபர்களை கண்காணிக்க, முறைப்படுத்த விதிகளை வகுக்கும்படி, தமிழக காவல்துறை டிஜிபிக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இதுதொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக டிஜிபிக்கும், ஸ்விக்கி, சொமேட்டோ, டன்ஸோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications