வானம் இடிந்து விழுந்து விடாது.. துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்திற்கு தடை! அனல் பறந்த வில்சன் வாதம்
சென்னை: பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை சார்பில் ஆஜராகியிருந்த பி.வில்சன் மற்றும் தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் முன்வைத்திருந்த வாதங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக நீதிமன்றத்தில் தமிழக உயர்கல்வித் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிட்டதாவது, "துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனுதாரர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். தடை கோரிய மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது. வானம் இடிந்து விழுந்து விடாது.
இந்த இடைக்கால தடை கோரிய மனுவை விசாரித்தால், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு செல்லாததாகி விடும். முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. நாளை இரு மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும். தேடுதல் குழு நியமனத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடம் இருந்து எடுத்து அரசுக்கு வழங்கியதை எதிர்த்து மட்டுமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆளுநரை, பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணைவேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசிதழ் தவறானது. இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது; உண்மையானதல்ல. இது மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்த காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை" என வில்சன் வாதங்களை முன்வைத்தார்.
அதே நேரம், தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க அரசுத்தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும். சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 10 பல்கலைக்கழகங்களில் இரு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதுவும், ஜூன் 10 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கூறப்பட்டுள்ளது. அதனால் தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, சட்டப்பிரிவு அமலுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேடுதல் குழு நியமித்தது பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை விட தமிழக அரசின் சட்டம் மேலோங்கி நிற்கும்.
பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்து எந்த நிதியுதவியும் பெறாத நிலையில், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் குறித்த விதிகளை ஏற்க மறுத்து 2021 ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு சட்டங்கள் சட்டவிரோதமானதல்ல. யூகத்தின் அடிப்படையில் சட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. விரிவான வாதங்கள் முன்வைக்க வேண்டியுள்ளதால், பதில்மனு தாக்கல் செய்ய 2 வாரகால அவகாசம் வழங்க வேண்டும்.
பிரதான சட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை நியமிக்க கூறவில்லை. தற்போதைய சட்டம் கூட, வேந்தர் என்பதற்கு பதில் அரசு என்ற திருத்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது" எனவும் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications