சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்... ரேஸில் முந்துவது யார்? அனலடிக்கும் ஹைகோர்ட்
சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் சட்டசபை தேர்தலை போல படு பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல். பல ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் டிசம்பர் 8ம் தேதி நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் குழு அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சங்கம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம். உள்ளுர் பிரச்சனை முதல் உலக பிரச்சனை வரை முதலில் களத்தில் குதித்து போரட்டத்தில் ஈடுபடும் முதல் சங்கமாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளது.

150 ஆண்டுகள் பழமையான இந்த சங்கத்தில் 17 ஆயிரம் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அரசியலில் உள்ள முக்கிய தலைவர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள். இந்த சங்கத்தில் தலைவர்,துணைத்தலைவர்,செயலாளர்,நூலகர், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 17 பதவிகள் உள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சங்கத்தின் தேர்தல் கடைசியாக கடந்த ஆண்டு 2016 இல் நடைபெற்ற நிலையில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2018 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலுக்கு தடை விதித்திருந்தது. அதிரடிக்கு பெயர்பெற்ற நீதிபதி கிருபாகரன் இருந்த போது, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கு பல கட்டுபாடுகளை விதித்தார்.
இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த தேர்தல் நடைபெறாமலே இருந்து வந்தது. பின்னர், இந்த வாழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
தலைவர் பதவிக்கு ஜி மோகனகிருஷ்ணன், ஆர்.சி. பால் கனகராஜ், எம்.வேல்முருகன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். ஜனவரி 9ஆம் தேதி வாக்குபதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில் வாக்கு சீட்டை சிலர் மொத்தமாக அள்ளி சென்றுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து வழக்கறிஞர்கள் சிலர் வாக்குசாவடியில் தகராறு செய்தனர். இதைதொடர்ந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை சிலர் அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றம் நிலவியது. இதனையடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தலை நடத்த கோரி வழக்கறிஞர்கள் சத்தியபால், எம்.வேல்முருகன், ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டனர். இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் நடத்தும் குழுவிடம் கருத்து கேட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, தேர்தலை நடத்துவது தொடர்பான ஏற்பாடுகள், தேதி, எந்த இடத்தில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து தெரிவிக்குமாறு தேர்தல் நடத்தும் குழுவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில்தான் நீதிபதி மகாதேவன் அமர்வு தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்து அடுத்த மாதம் எட்டாம் தேதி தேர்தல் நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் , முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், முன்னாள் செயலாளர் எம்.வேல்முருகன், சத்தியபால் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை பல்வேறு பிரச்சனைகள் வழக்கறிஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
ஆன்லைன் விசாரணை முறையில் உள்ள குறைபாடுகள், ஆன்லைன் வழக்கு தாக்கல் செய்யும்முறையில் உள்ள நடைமுறை பிரச்சனைகள்,வழக்கறிஞர்கள் போலீசாரிடையே அவ்வப்போது ஏற்படும் மோதல்கள், நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்படாதது, வெளிமாநில நீதிபதிகள் இங்கு இடமாற்றம் செய்வதை எதிர்க்காதது,கார் பார்க்கிங்,
இளம் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படாதது, உத்தரவு,தீர்ப்புகளை நகல்களை பெறுவதில் தாமதம்,வழக்கை பட்டியலிடுவதில் உள்ள சிரமம் என அடுக்கடுக்கான பிரச்சனைகள் சந்தித்து வருகின்றனர்.
இதற்கு யாரும் பெரிதாக குரல் கொடுக்கவில்லை என்ற குமுறல் வழக்கறிஞர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஜனநாயகப்படி சங்கம் செயல்படாமல் செயலிழந்த நிலைதான் இருந்ததாக வழக்கறிஞர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். களத்தில் உள்ள முன்னாள் தலைவரும் பார் கவுன்சில் உறுப்பினருமான ஆர்.சி.பால்கனகராஜ் பாஜகாவின் சட்டப்பிரிவு செயலாளராக உள்ளதால் மற்ற கட்சியினர் எப்படி ஆதாரிப்பார்கள் என்ற கேள்வியும் உள்ளது.
பார்கவுன்சில் உறுப்பினராக உள்ள எம்.வேல்முருகன் ,ஏற்கனவே வழக்கறிஞர் சங்க செயலாளராக இருந்தவர். வழக்கறிஞகளின் பிரச்சனைக்காக பார்கவுன்சில் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர் என்றும், அனைத்து போரட்டங்களிலும் எந்த பாரபட்சமும் காட்டாமல் பங்கேற்பவர் என்பதால் நடுநிலை வழக்கறிஞர்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
அரசியல் களத்தை விட அனல் அடிக்கிறது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல். டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் தலைமை பதவியை கைப்பற்றுவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications